இறுதி கட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு.. கருணாநிதி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை
சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையை இறுதி செய்வது தொடர்பாக சென்னை கோபாலபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில், இலவச ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ரேஷன்கார்டுதாரர்கள் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் மாதம் ரூ.5 ஆயிரம் பணம் வழங்கும் வாக்குறுதிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கடந்த பல நாட்களாக யூகங்கள் உலா வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் அறிக்கை இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் 2 நாட்கள் முன்பு அறிவித்திருந்தார்.
கூட்டணிக்கு தேமுதிக கைவிட்ட நிலையில், தேர்தல் அறிக்கையை மலைபோல நம்பியுள்ளது, திமுக தலைமை. தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காக, கருணாநிதி தலைமையில், கோபாலபுரம் இல்லத்தில் இன்று நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், மகளிரணி சார்பில் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அம்சங்கள் குறித்தும், மக்களிடம் பிரதானப்படுத்தி பேச வேண்டிய திட்டங்கள் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.