தருமபுரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் பலி
தருமபுரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டதில் மேலும் ஒருவர் பலியாகிவிட்டார்.
தருமபுரி: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் உயிரிழந்துவிட்டார்.
தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவுக்காக, தருமபுரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாலையையே மறைக்கும் அளவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
மேலும் முதல்வரின் வருகைக்காக போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு மக்கள் 5 கி.மீ.தூரம் சுற்றிக் கொண்டு நகரத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போலீஸார் கெடுபிடி காட்டியதாலும் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர்.
மாலை விழா நிறைவுக்குப் பிறகு, நல்லாம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தட்டிகளை அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் கணேசன் (36), முருகேசன் ஆகியோர் அகற்றினர். அப்போது, அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில், கணேசன் உடல் கருகி அதே இடத்திலேயே உயிரிழந்தார்.
காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முருகேசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முருகேசன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.