அடுத்த கட்ட நடவடிக்கை என்ன… அமைச்சர் தங்கமணி வீட்டில் சீனியர் அமைச்சர்கள் அவசர ஆலோசனை
ஓபிஎஸ் அணியில் உள்ள கே.பி. முனுசாமி, எடப்பாடி பழனிச்சாமி அணியினரை விமர்சித்து பேசியதை அடுத்து அமைச்சர் தங்கமணி வீட்டில் சீனியர் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: எடப்பாடி அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் இணைந்து விடுவார்கள் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், கே.பி. முனுசாமி சசிகலா குடும்பத்தில் உள்ள எல்லோரையும் கட்சியில் இருந்து அதிகாரபூர்வமாக நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.
இன்று இரு அணிகளும் இணைவதற்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் கே.பி. முனுசாமியின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார், லோக் சபா துணை சபா நாயகர் தம்பிதுரை ஆகியோரையும் கே.பி. முனுசாமி கடுமையாக சாடினார்.
இந்நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும், இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை தொடரலாமா வேண்டாமா என்பது குறித்தெல்லாம் விவாதிக்க அவசர ஆலோசனைக் கூட்டத்தை, அமைச்சர் தங்கமணி வீட்டில் மூத்த அமைச்சர்கள் நடத்தி வருகின்றனர்.