பல்லாவரம் நகராட்சியில் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட வெள்ளம்.. ஆதாரங்களை அளித்த பிறகும் அசையாத அதிகாரிகள்
ஏரிக்கு செல்ல வேண்டிய கால்வாய்கள் வழியிலேயே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுதான் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை: பாட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததன் காரணமாக, பல்லாவரம் நகராட்சி பகுதியின் பல பகுதிகளில் வெள்ள நீர் சேர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர், பிரசன்னா வெங்கடரத்னம் நமக்கு ஆதாரங்களோடு தகவல்களை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் பேசினோம். "2012 முதலே இதுதொடர்பாக பல்வேறு புகார்களை கொடுத்த பிறகும்கூட, அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று ஆதங்கப்படுகிறார்.

ஆக்கிரமிப்புகளால் வெள்ளம்
பல்லாவரம் நகராட்சி, வார்டு எண்17 பகுதிக்கு உட்பட்ட ஸ்வாமிமலை நகர், எம்கே நகர், பெருமாள் நகர் எஸ்க்டென்ஷன், ஸ்வாமிமலை எக்ஸ்டென்ஷன், ஏஜிஎஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்கள் அவதிப்பட காரணம் இந்த ஆக்கிரமிப்புகள்தான் என்பது குற்றச்சாட்டு.

ஏரிக்கு நீர் செல்லவில்லை
ஏரிக்கு செல்ல வேண்டிய கால்வாய்கள் வழியிலேயே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுதான் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய காரணம் என்று கூறப்படுகிறது. சர்வே எண் 91/8 பகுதியிலுள்ள பாட்டை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளதை ஆதாரத்தோடு அதிகாரிகளிடம் அளித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இடத்தை காலி செய்யும் மக்கள்
நேற்று பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து கிளம்பும் நிலை உருவாக இந்த ஆக்கிரமிப்புகள்தான் காரணம். எப்போது வெள்ளம் ஏற்பட்டாலும், இப்பகுதி மக்களுக்கு இதே பாதிப்பு தொடருகிறது.

நடவடிக்கை எடுப்பார்களா?
ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கையை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும். அதிகாரிகள் இப்போதாவது மக்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications