2017 விடை பெற்றது... 2018 பிறந்தது... மெரினாவில் இளைஞர்கள் உற்சாகம் #HappyNewYear2018
ஆங்கில புத்தாண்டை அடுத்து சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரையில் இளைஞர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: ஆங்கில புத்தாண்டு பிறந்ததை அடுத்து சென்னையில் நேற்று நள்ளிரவு மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் இளைஞர்கள் ஒன்று திரண்டு புது ஆண்டை இனிதே வரவேற்றனர்.
மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் கடற்கரையில் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக நேற்று இரவு 8 மணி முதல் இளைஞர்கள், பெண்கள் என திரண்டனர்.
கடற்கரைகள் மட்டுமல்லாது சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என புத்தாண்டு களைகட்டியது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சென்னை முழுவதும் 17 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடற்கரை பகுதிகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க 500-க்கும் மேற்பட்ட போலீஸார் சாதாரண உடையில் கண்காணித்தனர். 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் இளைஞர்கள் ஹேப்பி நியூ இயர் என்று வாழ்த்துகளை பரிமாறி கொண்டு வாணவேடிக்கை வெடித்தனர். சிலர் இனிப்புகளையும் பரிமாறி கொண்டனர்.
மது குடித்து வாகன ஓட்டுகின்றனரா என்று வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்தனர். பைக் ரேஸ் குறித்தும் போலீஸார் கண்காணித்திருந்தனர். மேலும் வாகன தணிக்கையும் நடத்தப்பட்டது. மக்கள் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. விபத்துகள் ஏற்படாத வண்ணம் மேம்பாலங்கள் மூடப்பட்டன.
ஆலயங்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு தங்களுக்கு வளத்தையும், செல்வத்தையும் , நிம்மதி, ஆரோக்கியமான வாழ்வை தர வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டனர்.