கச்சா எண்ணெய் கொட்டிய எண்ணூர் கடலில் மீன்பிடிக்க, குளிக்க தடை!
எண்ணூர் கடற்கரையில் இரு கப்பல்கள் மோதியதில் கச்சா எண்ணெய் கொட்டப்பட்டதால் அந்த கடற்பகுதியானது மீன் பிடிக்க தகுதியில்லாததாக தமிழக சுற்றுச்சூழல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: எண்ணூர் கடற்கரையில் இரு கப்பல்கள் மோதியதில் கச்சா எண்ணெய் கொட்டப்பட்ட அந்த கடற்கரை பகுதியானது மீன் பிடிக்க தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28-ஆம் தேதி எண்ணூர் துறைமுகம் அருகில் கப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதில் மீன்கள், ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தன. கச்சா எண்ணெய் படலம் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை பரவியது. இதனால் மீனவர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
உடைந்த கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய் கடல் நீரில் ஒரு அடி உயரத்திற்கு திட்டாக படர்ந்துள்ளதை பிரித்து எடுக்கும் பணியில் கடலோர காவல் படையினர் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களும் ஈடுபட்டனர். வெறும் கைகளாலும், வாளிகளாலும்தான் எண்ணெய் அகற்றப்பட்டு வருகிறது. 1800 பேர் எண்ணெய் அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
கச்சா எண்ணெய் கொட்டிய சென்னை எண்ணூர் கடல் பகுதி மீன்பிடிக்க தகுதியற்றது என தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்கு அளித்துள்ள பதிலில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது.
மேலும் கச்சா எண்ணெய் கசிவால் மாசடைந்த எண்ணூர் கடல் பகுதி குளிக்கவும் தகுதியற்றது. எண்ணூர் கடலில் பிடிக்கப்பட்ட மீன் குறித்த ரசாயன அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் சுற்றுலா துறையின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.