ஈபிஎஸ் அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்... ஆகஸ்ட் புரட்சிக்கு ரெடியாகும் ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போகிறாராம் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின். ஆகஸ்ட் 15க்கு மேல் புரட்சி செய்ய தயாராகி வருகிறாராம்.
சென்னை: சுதந்திரதினத்தன்று கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றிய உடனே புரட்சியை சந்திக்கப் போகிறாராம். ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து புரட்சி செய்யப் போகிறவர் மு.க.ஸ்டாலின்.
எந்த நேரத்தில் இந்த ஆட்சி பதவியேற்றதோ தெரியவில்லை 3 முதல்வர்கள் மாறிவிட்டனர். ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் திசைக்கொருவராக சிதறியிருக்க, ஆட்சியை கவிழ்க்க எதிர்கட்சி திட்டம் தீட்டி வருகிறதாம்.
கடந்த 2016 மே மாதம் அமோக வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது அதிமுக. பதவியேற்பு நடக்கும் போது திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஐசியுவில் அட்மிட் ஆனார். சரியாக 5 மாதம் கூட ஆளவில்லை ஜெயலலிதா அப்பல்லோவில் அட்மிட் ஆனார்.

ஓபிஎஸ் புரட்சி
பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து சசிகலாவிற்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார் ஓபிஎஸ். கட்சி பிளவுபட்டது. 11 எம்எல்ஏக்கள், 10 எம்பிக்கள் ஓபிஎஸ் பக்கம் சென்றனர். 122 எம்எல்ஏக்களை கூவத்தூரில் கொண்டு போய் அடைகாத்த சசிகலா ஆட்சியை காப்பாற்றினார்.

எடப்பாடி பழனிச்சாமி
தான் முதல்வராகவேண்டும் என்று ஆசைப்பட்டுதான் ஒபிஎஸ்ஐ ராஜினாமா செய்யச் சொன்னார். மக்கள் எதிர்ப்பு ஒரு பக்கம் இருக்க, ஆண்டவன் தீர்ப்பு உச்சநீதிமன்ற வடிவில் வந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்குப் போனார். ஜெயிலுக்கு போகும் முன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினர்.

வேடிக்கை பார்த்த ஸ்டாலின்
அதிமுகவில் இத்தனை களேபரங்கள் நடக்க எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் சும்மா வேடிக்கை மட்டுமே பார்த்தார். கருணாநிதி மட்டும் உடல் நலத்தோடு ஆரோக்கியமாக அரசியல் செய்தால் நடந்திருப்பதே வேறு என்று திமுகவினரே ஸ்டாலின் காதுபட கமெண்ட் அடித்தனர்.

சட்டை கிழிஞ்சதுதான் மிச்சம்
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக பிப்ரவரி மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அன்று திமுகவினர் நடத்திய கலாட்டாவில் ஸ்டாலின் சட்டை கிழிந்ததுதான் மிச்சம். சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார் ஈபிஎஸ்.

ஈபிஎஸ் - டிடிவி தினகரன்
தன்னை முதல்வராக தேர்ந்தெடுத்த சசிகலா, டிடிவி தினகரன் ஒதுக்கி வைப்பதாக ஈபிஎஸ் தலைமையிலான அமைச்சர்கள் அறிவித்தனர். இதனை ஏற்காத கட்சி எம்எல்ஏகள் 20க்கும் மேற்பட்டோர் டிடிவி தினகரன் பக்கம் நின்றனர்.

எதுவும் செய்யாத ஸ்டாலின்
ஆளும் எடப்பாடி பழனிச்சாமிக்கு 80 எம்எல்ஏக்கள் மட்டுமே இப்போதைக்கு ஆதரவாக இருக்கின்றனர். 40 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். ஆளும் அரசு ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் பட்ஜெட் தாக்கல், மானியக்கோரிக்கை மீதான விவாதத்தை வெற்றிகரமாக நடத்தி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

உசுப்பேற்றும் திமுக தலைகள்
தினம் ஒரு கலாட்டாக்கள் அதிமுகவில் அரங்கேறினாலும் வலுவான எதிர்கட்சித்தலைவரான ஸ்டாலின் வேடிக்கை மட்டுமே பார்ப்பது கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு வருத்தமாக இருக்கிறது. மறுபடியும் நீங்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாங்க நாங்க பாத்துக்கிறோம் என்று ஸ்டாலினிடம் கூறி வருகின்றனர்.

ஸ்டாலின் புரட்சி
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக கொடியேற்றிய பின்னர் சட்டசபையில் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாம் என்று நினைக்கிறாராம் ஸ்டாலின். ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் சிலரை வளைக்க திட்டமிட்டுள்ளார்களாம். இதற்காக திரைமறைவாக பேரமும் பேசப்படுகிறதாம்.

ஆட்சி மாற்றமா? முதல்வர் மாற்றமா?
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருபக்கம் டிடிவி தினகரனின் எச்சரிக்கை குடைச்சலை கொடுத்தால், மற்றொரு பக்கம் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின் நம்பிக்கையில்லாத தீர்மானமும் தலைவலிதான். ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆட்சி தப்புமா என்பதே கேள்விக்குறிதான்.

என்ன செய்யப் போகிறார் ஈபிஎஸ்
பிப்ரவரி மாதம் 122 எம்எல்ஏக்களை ஒற்றுமையாக கொண்டு வந்து நிறுத்தியது டிடிவி தினகரன்தான்.
இம்முறை டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் என பலமுனை தாக்குதல் உள்ளது. ஆட்சியைக் காப்பாற்ற 117 எம்எல்ஏக்கள் பெரும்பான்மைக்கு தேவை. சமாளித்து கரையேறுவாரா அல்லது ஆட்சியைக் காப்பாற்ற சசிகலா குடும்பத்தினரிடம் சரண்டராவாரா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications