பந்தைப் பார்த்து வெடிகுண்டு என பயந்த மக்கள் - மர்மநபர்களால் ஈரோட்டில் பதட்டம்
ஈரோடு: பேருந்து நிலையம் அருகே சாலையில் கிடந்த மர்மப் பொருளை பொதுமக்கள் வெடிகுண்டு எனக் கருதி போலீசாருக்கு தகவல் அளித்ததால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் சோதனைக்குப் பின்னர் அது நூல் பந்து எனக் கண்டுபிடிக்கப் பட்டது.
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், கரூர் செல்லும் பஸ்கள் வெளியே வரும் சாலையில், இன்று அதிகாலை நாட்டு வெடிகுண்டு போல் ஒரு மர்ம பொருள் கிடந்தது. நூல்களால் சுற்றப்பட்ட அந்தப் பந்தில் ஒரு திரியும் இணைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியில் சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த மர்மப் பொருளை மீட்டனர். பின்னர், போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் (பொறுப்பு) முன்னிலையில் வெடிகுண்டு போல் காணப்பட்ட அந்த மர்ம பொருளை தண்ணீருக்குள் போட்டனர்.
இதற்கிடையே தகவலறிந்து வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். தொடர்ந்து அவர்கள் நடத்திய சோதனையில், சாலையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் வெறும் துணி மற்றும் நூலால் கட்டப்பட்டது பொருள் தான். வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பிறகு அந்த பந்து போன்று இருந்த பொருளை போலீசார் பிரித்து தூக்கி வீசினர்.
பொதுமக்களை பயமுறுத்தும் நோக்கில் நூல் பந்தை வெடிகுண்டு போல் சித்தரித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications