காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்: ஈஸ்வரன்
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள் என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தொடர்ந்து தமிழக விவசாயிகள் காவிரி நதி நீர் விவகாரத்தில் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்று கொங்குநாடு மக்கள்தேசியக்கட்சித் தலைவர் ஈஸ்வரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கான காவிரி நீர் அளவை 177.25 டிஎம்சியாக உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்ட தீர்ப்பில் குறைத்துள்ளது.இதுதொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களும் 2007 -ஆம் ஆண்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை கொண்ட அமர்வு இன்று வழங்கியுள்ள தீர்ப்பு தமிழகத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 192 டி.எம்.சியிலிருந்து 177.25 டி.எம்.சியாக குறைத்து தீர்ப்பு வழங்கியிருப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கில் அமைந்திருக்கிறது.
காவிரி தொடர்பான வழக்குக்கு வழக்கு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரின் அளவை குறைத்துக்கொண்டே வருவது ஏற்புடையதல்ல. கேரளாவிற்கும், புதுச்சேரிக்கும் கொடுக்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவு குறைக்கப்படவில்லை.
ஆனால் தமிழகத்திற்கு மட்டும் குறைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து கர்நாடகா காவிரி நீரை தமிழகத்திற்கு சரியான நேரத்தில் தர மறுப்பதால் ஆண்டுக்கு ஆண்டு டெல்டா மாவட்டங்களில் விவசாயம் நலிவடைந்து வருகிறது.
தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் விவசாயத்தை அழிவு பாதையிலிருந்து காப்பாற்றுவது தமிழக அரசின் கடமை. தமிழகத்தின் நீர் தேவையை உணர்ந்து தமிழக முதல்வர் அவர்களும், தமிழக அரசும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய தருணம் இது. இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்காவது மத்திய அரசு மதிப்பளித்து உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications