இந்த ரணகளத்திலேயும்.. தேமுதிகவை விட்டு அதிமுகவுக்கு ஓடி வந்த "பிரசிடென்ட்" கலைமணி!!
திண்டுக்கல்: அதிமுகவே கலகலத்துப் போய்க் கிடக்கிறது. சின்னச் சின்னப் பொடுசுக முதற் கொண்டு அதிமுகவைப் பார்த்து கிண்டலடிக்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. இந்த நிலையிலும் ஒருவர் கட்சி மாறி அதிமுகவில் சேர்ந்து திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
என்ன காமெடி என்றால் இவர் தேமுதிகவைச் சேர்ந்த பஞ்சாயத்து பிரசிடென்ட் ஆவார். ஏற்கனவே தேமுதிகவிலிருந்து முடிந்தவரை அள்ளிக் கொண்டு போய் விட்டது அதிமுக. இதனால் கேப்டன் விஜயகாந்த்தே நொந்து நூடூல்ஸாகிப் போய் விட்டார்.
இப்போது ஜெயலலிதா சிறைக்குப் போயுள்ளதால் சற்று ஆசுவாசப்பட்டு இருக்கிறார். தினசரி வேளை தவறாமல் அறிக்கை விடுகிறார். வெளியிலும் கூட நடமாடும் அளவுக்கு தெம்பாக இருக்கிறார். கட்சி இனி கரையாது என்ற நம்பிக்கையும் வந்துள்ளது. இந்த நிலையில் தேமுதிகவைச் சேர்ந்த ஒருவர் கட்சி தாவியிருப்பது அக்கட்சியினருக்கு சங்கடத்தைக் கொடுத்துள்ளது
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள கரிக்காலி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் கலைமணி. இவர் தே.மு.தி.க ஒன்றிய அவைத்தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கட்சி தலைமையின் நடவடிக்கையில் மிகுந்த அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது மிகுந்த வேதனையடைந்த கலைமணி சோகத்துடன் காணப்பட்டார். அன்று முதல் கருப்புச்சட்டை அணிந்து அ.தி.மு.கவினர் நடத்திய உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்டார்.
மேலும் வேடசந்தூர் எம்.எல்.ஏ பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அ.தி.மு.கவில் முழுமையாக இணைத்துக் கொள்வதாக அறிவித்தார். ஜெயலலிதா கைது செய்யப்பட்ட சம்பவம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், இனிமேல் அ.தி.மு.கவிலேயே இணைந்து செயல்பட போவதாகவும் கலைமணி தெரிவித்தார்.
கரிக்காலி கலைமணி கடைசியில் "கருங்காலி" என்ற பெயரைப் பெற்று விட்டாரே...!