வழக்குகளில் இருந்து தப்பிக்க தான் மோடியை சந்தித்தார் ஜெ.- ஈவிகேஎஸ் கடும் விமர்சனம்
நாகர்கோவில்: வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளத் தான் பிரதமர் மோடியை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துள்ளார் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியில் கடந்த 27.9.15 அன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ஈ.வி.கேஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குக்காக நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை ஆஜர் ஆனார். இளங்கோவன் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதன் பின்னர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் பிரதமர் மோடியை பல கோரிக்கைளை கொடுத்துள்ளார். இது திமுக தலைவர் கருணாநிதி கூறியதுபோல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த அதே கோரிக்கைகளைதான் அவர் திரும்ப கொடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்தித்தது அவர் மீதான வழக்குகளில் இருந்து தன்னை பாதுகாப்பதற்காக தானே தவிர, மக்களின் நலனுக்காக அல்ல.
தி.மு.க. தலைவர் கருணாநிதி அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா தலைவர்களாலும் மிகவும் மதிக்கப்படும் தலைவர். கடந்த 1957-ம் ஆண்டு முதல் சட்டசபை உறுப்பினராக அவர் பதவி வகிக்கிறார். மேலும் முதலமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு, சட்டசபையில் சிறப்பு இடம் ஒதுக்குவதைவிட, முதன்மையான இடம் வழங்க வேண்டும். சட்டசபையில் ஆளும் கட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே எதிர்க்கட்சியின் செயல்பாடும் அமைபும்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நான் உயிரோடு இருக்கும் வரை காங்கிரஸ் வளராது என்று கூறியிருக்கிறார். ஆனால், பா.ஜ.க.வில் அவர் இருந்ததால் அது டெபாசிட்கூட பெறவில்லை.
"அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆசிரியர் மற்றும் கண்டக்டர் நியமனத்துக்கு லஞ்சம் வாங்கப்பட்டது' எனப் பேசியதற்காக என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கிகை ஆதாரங்ளுடன் நிரூபிப்பேன்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.