இதோ மீண்டும் இளங்கோவன்.. ஈரோட்டிலிருந்து இடம் பெயர்ந்து திருப்பூரில் போட்டியிட திட்டம்!
திருப்பூர்: முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளாராம்.
காங்கரிஸ் கட்சி ஒற்றைப் பனை மரம் போல ஆகி விட்டது. அதைக் கூட்டு சேர்க்க யாரும் வரவில்லை. இவர்களாகப் போய் யாரையாவது அணுகினாலும் சுத்தமாக ஆதரவு இல்லை.
இதனால் காங்கிரஸ் கட்சியினர் யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்று புலம்பல் பாட்டுப் பாடியபடி தனித்து நிற்கும் மன நிலைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
இது இளங்கோவன் கதை
இதில் காங்கிரஸ் தலைவர்களில் பெரும் பேச்சாக பேசிக் கொண்டிருந்தவர் இளங்கோவன்தான். எங்களுக்கு யாரும் தேவையில்லை, தனித்துப் போட்டியிடுவோம், திமுகவும் தேவையில்லை, அதிமுகவும் தேவையில்லை என்று பெரும் பேச்சாக பேசிக் கொண்டிருந்தார்.
இப்ப பேச்சைக் காணோம்
ஆனால் சமீப காலமாக அவரது பேச்சையே காணோம். என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை.
சத்தம் போடாமல் ஒரு வேலை
ஆனால் அவர் சத்தம் போடாமல் ஒரு வேலை செய்து வருகிறார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது வரும் தேர்தலில் போட்டியிடுவற்கான முஸ்தீபுகளில் அவர் ஈடுபட்டுள்ளாராம்.
ஈரோட்டில் கோட்டை விட்டு
கடந்த தேர்தலிலேயே மண்ணைக் கவ்வியவர் இளங்கோவன். கடந்த முறை அவர் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அவரை எதிர்த்து மதிமுக வேட்பாளரான கணேசமூர்த்தி போட்டியிட்டு வென்றார். அப்போது அதிமுகவுடன் மதிமுக கூட்டணி அமைத்திருந்தது.
மறுபடியும் கணேசனா...
இந்த நிலையில் ஈரோட்டில் கணேசமூர்த்தியே மறுபடியும் போட்டியிடப் போகிறார். இந்த முறை மதிமுக, பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. கணேசமூர்த்திக்கு நல்ல பெயர், சொந்த செல்வாக்கு உள்ளதால் அவரது வெற்றி உறுதி என்கிறார்கள்.
திருப்பூருக்கு இடம் பெயரும் இளங்கோவன்
இதனால் இந்த முறை ஈரோட்டில் போட்டியிட்டால் டெபாசிட் கிழிஞ்சது என்ற பயத்தில் உள்ளாராம் இளங்கோவன். இதனால் திருப்பூருக்கு இடம் பெயருகிறார்.
மேலிடமும் ஒகே.
திருப்பூரில் இளங்கோவன் போட்டியிடுவதற்கு கட்சி மேலிடமும் கூட ஒகே சொல்லி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து திருப்பூரில் வெல்வதற்கான வாய்ப்புகள் குறித்து தனது நெருங்கிய சகாக்களுடன், ஆதரவாளர்களுடன் ஆலோசனை கலந்தபடி இருக்கிறாராம் இளங்கோவன்.
சீட் கேட்டாச்சு
இதை இளங்கோவனும் கூட உறுதிப்படுத்தியுள்ளார். சீட் கேட்டுள்ளேன். கொடுத்தால் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
வாசனை விட தைரியம் ஜாஸ்திதான்
பரவாயில்லையே தேர்தலிலேயே நிற்காமல் தப்பித்து விட்ட வாசனுடன் ஒப்பிடுகயைில், தோற்றாலும் பரவாயில்லை என்று தைரியமாக நிற்கும் இளங்கோவன் எவ்வளவோ தேவலைதான்.