கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை: கார்த்தி சிதம்பரம் பற்றி ஈ.வி.கே.எஸ் தாக்கு
சென்னை: கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழி போல் சில அற்பர்களுக்கு பெருந்தலைவரின் புகழ் பற்றி எதுவும் தெரியாது என கார்த்தி சிதம்பரம் பற்றி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. பிரிவு நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் தற்போது உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மட்டும் எழுதிவிட்டால் போதாது. மாறாக அவர் டெல்லிக்கு சென்று பிரதமர், விவசாயத் துறை அமைச்சர், உரத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து நிலைமையை எடுத்துக் கூற வேண்டும்.
பலமாக விளம்பரம் செய்து துவங்கப்பட்ட அம்மா உணவகங்களில் 2 இட்லி கேட்டால் ஒன்று கொடுக்கிறார்கள். சப்பாத்தியின் அளவோ சுருங்கிப் போய்விட்டது. புதிய திட்டங்களை அறிவிக்காவிட்டாலும் அறிவித்த திட்டங்களையாவது ஒழுங்காக செயல்படுத்த வேண்டும் என்றார்.
காமராஜரின் பெயரை கூறி இனியும் வாக்கு கேட்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி தெரிவித்துள்ளது பற்றி செய்தியாளர்கள் இளங்கோவனிடம் கேட்டனர்.
அதற்கு அவர் கூறுகையில், கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழி போல் சில அற்பர்களுக்கு பெருந்தலைவரின் புகழ் பற்றி எதுவும் தெரியாது என்றார்.