மாநிலங்களுக்கு எதிரான போக்கை மோடி கைவிடவில்லை எனில் கடும் விளைவுகள் ஏற்படும்: ஈ.வி.கே.எஸ்.
சென்னை: மாநிலங்களுக்கு எதிரான போக்கை நரேந்திர மோடி கைடவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, "இந்தியாவில் தயாரிப்போம்' எனும் அடிப்படையில் செயல் திட்டம் ஒன்றை அறிவித்தார். இந்தத் திட்டத்தின் வாயிலாக பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் அந்நிய நேரடி முதலீடுகளைப் பெற முடியும் என்று கருதினார். ஆனால் சமீபத்தில் குஜராத்தில் நடத்தப்பட்ட "எழுச்சிமிகு குஜராத்' எனும் திட்டத்தின் அடிப்படையில், உலகத்தில் உள்ள பல வர்த்தக நிறுவனங்களையும் குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளார்.
10 ஆண்டு காலம் குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சமமாகக் கருதியிருக்க வேண்டும். ஆனால், "எழுச்சிமிகு குஜராத்' திட்டத்துக்காக 21 ஆயிரம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து, ரூ.25 லட்சம் கோடி முதலீடு செய்வதற்கு வழிவகை ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலமாக, பிரதமர் பொறுப்பில் இருக்கும் நரேந்திர மோடி குஜராத் மாநில வளர்ச்சிக்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவது ஏன்? கூட்டாட்சி தத்துவத்தைக் குழிதோண்டி புதைக்கும் முயற்சி இது.
மின் இணைப்பு உள்ள வீடுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் விநியோகிப்பது நிறுத்தப்படும் என்று பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படுகிறது.
மானியம் இல்லாமல் எரிவாயு இணைப்பு வழங்குவதே எங்கள் நோக்கம் என்று மத்திய அமைச்சர் பிரசாரம் செய்கிறார். மானியத்துக்கு எதிரானவர்கள் மக்களுக்கே எதிரானவர்கள் ஆவர். நரேந்திர மோடியை நாட்டு மக்கள் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ, அவரது சொந்த தொகுதியில் உள்ள வாரணாசியில் உள்ள கண்டோன்மென்ட் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக தோல்வி கண்டுள்ளது. அதேபோல, ராஜ்நாத் சிங் தொகுதியான லக்னோவிலும் பாஜக தோல்வி கண்டுள்ளது. மிருகபல மெஜாரிட்டியில் ஆட்சியமைத்த பாஜகவுக்கு உத்தரபிரதேச மாநிலத்திலேயே அபாய சங்கு ஊதப்பட்டுள்ளது.
எனவே, மாநிலங்களுக்கு எதிரான இந்தப் போக்கை நரேந்திர மோடி கைடவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.