நீட் மையம் தமிழகத்தில் இருந்திருந்தால் அப்பா உயிருடன் இருந்திருப்பார்.. கஸ்தூரி மகாலிங்கம் உருக்கம்
நீட் தேர்வு மையம் தமிழகத்தில் இருந்திருந்தால் அப்பா உயிருடன் இருந்திருப்பார் என அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருத்துறைப்பூண்டி நீட் தேர்வு மையம் தமிழகத்தில் இருந்திருந்தால் அப்பா உயிருடன் இருந்திருப்பார் என அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலான மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதற்காக ஏராளமான மாணவ, மாணவிகள் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சென்றனர். அதில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கமும் ஒருவர்.

மாரடைப்பால் மரணம்
மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு துணையாக அவரது தந்தை கிருஷ்ணசாமியும் எர்ணாகுளத்துக்கு சென்றார். நேற்று காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் தந்தை கிருஷ்ணசாமி மரணமடைந்தார்.

கண்ணீர் விட்ட மக்கள்
தேர்வு எழுதி முடித்துவிட்டு திரும்பிய மகன் கஸ்தூரி மகாலிங்கம் அப்பா எங்கே என கேட்டு தேடியது தமிழகம் மட்டுமின்றி நாட்டையே கலங்க வைத்தது. மகனின் தேடலை பார்த்த அங்கு கூடியிருந்த மக்கள் கண்ணீர் விட்டனர்.

சொந்த ஊரில் உடல்
மருத்துவமனையில் தந்தையின் உடலை பார்த்த கஸ்தூரி மகாலிங்கம் கதறி அழுதார். இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸிஸ் கிருஷ்ணசாமியின் உடல் அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடிக்கு கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் இருந்திருந்தால்
இந்நிலையில் தந்தையை பறிகொடுத்த கஸ்தூரி மகாலிங்கம் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீட் தேர்வு மையம் தமிழகத்தில் இருந்திருந்தால் அப்பா உயிருடன் இருந்திருப்பார் என அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அப்பாவை கேட்க முடியுமா?
அரசிடம் சென்று என் அப்பாவை கேட்க முடியுமா என்றும் கஸ்தூரி மகாலிங்கம் வேதனையுடன் கேள்வி எழுப்பினார். கஸ்தூரி மகாலிங்கத்தின் இந்த வேதனை பேச்சு அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது.












Click it and Unblock the Notifications