லஞ்ச வழக்கில் சஸ்பெண்ட்: எழும்பூர் அரசு கண் மருத்துவமனை மாஜி இயக்குநர் டாக்டர் ஸ்ரீதர் தற்கொலை
எழும்பூர் அரசு கண் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் டாக்டர் ஸ்ரீதர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: லஞ்சம் பெற்ற வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எழும்பூர் அரசு கண் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் டாக்டர் ஸ்ரீதர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பொன்னேரி அருகே நண்பரின் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்வையற்ற மாற்று திறனாளி பட்டத்தாரி இளைஞர் ஒருவருக்கு சான்றிதழ் வழங்க 200 ரூபாய் லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில் எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குநரை சஸ்பெண்ட் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் பரிந்துரைக்கப்பட்டது. அக்டோபர் மாதம் டாக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பார்வையற்ற மாற்று திறனாளிகள் வேலை வாய்ப்பு பெறவும், இன்ன பிற அரசு சலுகைகளை பெறவும் அரசு கண்மருத்துவமனை இயக்குநரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
இந்த சான்றிதழை பெற எழும்பூர் ருக்குமணி லஷ்மிபதி சாலையில் உள்ள அரசு கண் மருத்துவமனை இயக்குநரகத்தில் சான்றிதழ் கோரி 41 சதவீதம் பார்வை குறைபாடு உள்ள இளைஞர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.
அவரிடம் கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஸ்ரீதர் லஞ்சம் வாங்கும் வீடியோவை அறப்போர் இயக்கத்தினர் வெளியிட்டனர். 500 தன்னிடம் இல்லை என்று பார்வையற்ற மாற்றுத் திறனாளி இளைஞர் தெரிவித்தும், 500 கூட இல்லாமல் ஏன் வருகிறாய் என்று ஏளனமாக பேசிய டாக்டர் ஸ்ரீதர் விடாப்பிடியாக கையில் வைத்திருந்த 200 ரூபாயை தனது உதவியாளர் மூலம் வாங்கி கொண்ட பிறகே சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஸ்ரீதரிடம், தமிழக மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ விளக்கம் கேட்டார். வீடியோ ஆதாரத்துடன் சுகாதார செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள டாக்டர் எட்வின் ஜோ, டாக்டர் ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்யவும் பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் டாக்டர் ஸ்ரீதர் கடந்த அக்டோபர் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டாக்டர் ஸ்ரீதர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் டாக்டர் ஸ்ரீதர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.