கட்சி பெண் பிரபலங்களை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் போட்டோ.. காங். செயலாளர் புகார்
சென்னை: அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளரான ஹசினா சையத், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
பாலகிருஷ்ண பட்டாபி என்பவர், ஹரிமணி என்கிற பெயரில் போலியான பேஸ்புக் கணக்கை தொடங்கியுள்ளார். அதில் பிரபலமான பெண்கள் பற்றி அவதூறு பரப்பி வருகிறார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பெண் பிரபலங்களின் போட்டோக்களை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிடுகிறார்.

எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக கருத்துக்கள் பரப்பிய குற்றத்துக்காக தகுந்த சட்டப்பிரிவின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து ஹசினா சையத் கூறுகையில், "காங்கிரஸ் நிர்வாகிகள் சேர்ந்து பேஸ்புக்கில் காங்கிரஸ் முகநூல் நண்பர்கள் என்ற குரூப்பில் 1500க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறோம். கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சென்னை பாரிமுனையில் பேஸ்புக் காங்கிரஸ் நண்பர்கள் நேரில் சந்தித்து பேசினோம். அந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக்கில் பதிவு செய்தோம். இந்த சமயத்தில் ஹரிமணி என்ற பெயரில் அந்த புகைப்படங்களுக்கு இரட்டை அர்த்தம் கொண்ட பதிவு போடப்பட்டிருந்தது. அடுத்து அந்த பேஸ்புக் ஐ.டி.யிலிருந்து பிரபலமான பெண்கள் குறித்து அவதூறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.
பேஸ்புக் ஐ.டி யாருடையது என்று விசாரித்த போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ண பட்டாபி என்பது தெரியவந்தது. அவரை எச்சரித்தப்பிறகும் தொடர்ந்து பெண்களை குறித்த அவதூறு பரப்புவதை நிறுத்தவில்லை. சமூகத்தில் பெண்களை இவ்வாறு சித்தரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications