டாக்டர் சீட் வாங்கித்தருவதாக ரூ.43 லட்சம் மோசடி: போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
டெல்லி: டாக்டர் சீட் வாங்கித்தருவதாக கூறி 43 லட்சம் மோசடி செய்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை டெல்லியில் போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரமேனன். இவரது மகன் மதுகணேஷ் மேனன் (வயது 34). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக்கொண்டு சைரன் விளக்கு காரில் வலம் வந்தார்.
நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி நுனி நாக்கில் அவர் பேசிய ஆங்கில புலமையும் மோசடி வலையில் சிலரை சிக்க வைத்தது. மேலும் பிரதமர் அலுவலகத்தில் பணி புரிந்து வருவதாக அவர் போலி அடையாள அட்டையும் வைத்திருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த நாராயணன், ஜெய் ஹிந்த்புரம் செல்வராஜ், பங்கஜம் காலனி சுரேஷ் குமார் ஆகியோர் தொடர்பு கிடைத்தது. இதில் நாராயணனின் மகளுக்கு மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.43 லட்சம் வாங்கிய மதுகணேஷ் மேனன் மருத்துவ கல்லூரியில் சீட் எதுவும் வாங்கி தரவில்லை.
இதையடுத்து கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது பணம் தர மறுத்ததுடன் திருச்சூரில் உள்ள வீட்டில் மதுரையை சேர்ந்த 3 பேரையும் துப்பாக்கியை காட்டி மதுகணேஷ் மேனன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
எஸ்.பி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் மது கணேஷ்மேனன் ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லை என்றும், மத்திய மாநில அரசின் எந்த ஒரு பதவியிலும் அவர் இல்லை என்றும் தெரியவந்தது. போலி அடையாள அட்டையை வைத்துக்கொண்டு மதுரை, கோவை, சென்னை, பெங்களூர், கோவா, டெல்லி ஆகிய இடங்களில் பலரை ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து மதுகணேஷ் மேனனை பிடிக்க மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் கண்காணித்து வந்தனர்.
திருச்சூரில் தனிப்படை போலீசார் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நடத்திய சோதனையில் மதுகணேஷ்மேனன் சிக்கவில்லை. அவரது தந்தை ஸ்ரீதரமேனன் கைது செய்யப்பட்டார். வீட்டில் இருந்த துப்பாக்கி, போலி அடையாள அட்டை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
மதுகணேஷ் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் டெல்லியில் ஒரு ஓட்டலில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டெல்லி சென்ற மதுரை போலீசார் ஓட்டலில் பதுங்கிய மது கணேஷ் மேனனை கைது செய்தனர். அவரை பாதுகாப்புடன் மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பலரிடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications