கரும்புக் காட்டிற்கு தீ வைக்கப் போன முதியவர் தீயில் சிக்கிப் பலி
திருத்தணி: கரும்புக் காட்டில் எஞ்சிய இலைகளுக்கு தீ வைக்கப் போன முதியவர் ஒருவர் எதிர்பாராத வகையில் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருத்தணி, திருவிளங்காடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் என்ற 80 வயது முதியவர். இவரது மூன்று ஏக்கர் நிலத்தில் கரும்பு விவசாயம் செய்திருந்தனர். தற்போது அறுவடை முடிந்துள்ள நிலையில், வயலில் கிடந்த தேவையில்லாத இலைக் குப்பைகளுக்கு தீ வைப்பதற்காகச் சென்றுள்ளார் சஞ்சய்.
வயலுக்குச் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தார், அவரைத் தேடி வயலுக்குச் சென்றுள்ளனர். அங்கே, இலைச் சாம்பல் குப்பையின் நடுவே கருகிய நிலையில் கிடந்துள்ளார் சஞ்சய்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சஞ்சயின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பைகளுக்கு தீ வைத்த போது, எதிர்பாராத விதமாக தீயில் சிக்கிக் கொண்டாரா அல்லது சஞ்சயை யாரும் கொலை செய்து விட்டார்களா என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரும்.