கோவை அருகே பரிதாபம்.. ஒரு வயது பெண் குழந்தை வயிற்றில் வளர்ந்த 3.5 கிலோ சிசு அகற்றம்!
கோவை: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் இருந்து, 3.5 கிலோ எடையுள்ள கருவை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர் டாக்டர்கள்.
மேட்டுப்பாளையத்தை அடுத்த புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி சுமதி. இவர்களுடைய ஒரு வயது பெண் குழந்தையின் வயிற்றுப் பகுதியில் பெரிய வீக்கம் ஏற்பட்டது. அதனால், அக்குழந்தை காட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள், ஸ்கேன் மூலமாக குழந்தையைப் பரிசோதித் தபோது, குழந்தையின் வயிற்றில் உள்ள கட்டியில் சிசு வளர்வதையும், கல்லீரல், மண்ணீரல் இடம் மாறியிருப்பதையும் கண்டறிந்தனர். உடனடியாக அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மருத்துவமனை தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் விஜயகிரி தலைமையில் குழந்தைக்கு சனிக்கிழமை 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வயிற்றில் இருந்த 3.5 கிலோ சிசு அகற்றப்பட்டது.
அரிதிலும் அரிதாக இது போன்று ஏற்படும் என்று கூறிய மருத்துவர்கள், பெரிதும் சிரமப்பட்டு கருவை அகற்றியாக கூறினர். கருவானது சிறுநீரகம், கணையம், மண்ணீரம் இவற்றுடன் இரண்டற கலந்து பிணைந்திருந்ததால் அறுவை சிகிச்சை கடினமானதாக அமைந்தது.
இணைந்திருந்த உறுப்புகளை நீக்கவிட்டு கருவை அகற்றிய பின்னர், அதே இடத்தில் உறுப்புகளை பொருத்தியுள்ளனர். 8 கிலோ எடை இருந்த நிஷாவின் வயிற்றில் இருந்து 3.5 கிலோ எடையுள்ள கருவானது அகற்றப்பட்டுள்ளது. தற்போது குழந்தை நலமுடன் உள்ளகதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications