டி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா ? : டெல்லி உயர்நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு
தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று இறுதி தீர்ப்பளிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.
டெல்லி : டி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பளிக்க இருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது தொகுதியான ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது அ.தி.மு.க இரண்டு அணிகளாக உடைந்து கட்சி சின்னமான இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடி வந்தது. இந்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்தது.

இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கும் வேறு வேறு சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாகக் கூறி தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்தது. பிறகு, அ.தி.மு.க.,வில் நடந்த மாற்றங்களால் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைந்தன. தேர்தல் ஆணையமும் அவர்களுக்கே சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.
ஆர்.கே நகருக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்றும், ஒருதலைபட்சமாக செயல்பட்டு சின்னத்தை ஒதுக்கி இருப்பதாகவும் டி.டி.வி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேலும், இந்த இடைத்தேர்தலில் தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை கடந்த 1ம் தேதி விசாரித்த நீதிபதி எஸ்.பி.கர்க் தொப்பி சின்னம் ஒதுக்கீடு குறித்தான இறுதி உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டு இருந்தார். அதன்படி இன்று விசாரணையில் டி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்கப்படுமா என்று அவரது அணியினர் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.











Click it and Unblock the Notifications