இலங்கை கடற்படையிடம் சிக்கிய தமிழக மீனவர்.. பாட்டிலை விழுங்கி தற்கொலை முயற்சி
நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களில் ஒரு மீனவர் பாட்டிலை உடைத்து விழுங்கி தற்கொலைக்கு முயற்சி.
கோடியக்கரை: கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து திரிகோணமலையில் அடைத்து வைத்துள்ள விவகாரத்தில் ஒரு மீனவர் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். அக்கறைப் பேட்டையைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான படகில், 8 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், மீனவர்களையும் அவர்கள் சென்ற படகையும் சிறைபிடித்தனர். இந்த நிலையில் நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் பிடியில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்வதால் மீனவர் கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த 8 பேரில் ஒரு மீனவர், பாட்டிலை உடைத்து அதை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஞ்சிய 7 மீனவர்கள் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 மீனவர்களையும், 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இலங்கை கடற்படையின் அட்டகாசத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.