அடையாற்றில் பாய்ந்தோடும் 80000 கன அடி நீர் வெள்ளம்: சென்னை சைதாப்பேட்டை பாலம் உடையுமோ என பீதி!!
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி என்ற அளவிலிருந்து திறக்கப்பட்டதாலும், கனமழை நீர் நிலைகள் நிரம்பி வழிவதாலும் அடையாற்றில் 80000 கனஅடிநீர் கரைபுரண்டு ஓடுகிறது.
சென்னையில் திங்கட்கிழமை பிற்பகல் முதல் புதன்கிழமை அதிகாலை வரை கொட்டித்தீர்த்த கனமழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. பள்ளிக்கரணை நாராயணபுரம், செம்மஞ்சேரி, செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் நிரம்பி அதிகளவு உபரிநீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக மேற்கண்ட ஏரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
கடந்த மாதம் பெய்த மழைக்கு சுமார் 1 லட்சம் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். அபாய நிலையில் உபரி நீர் திறப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று வரலாறு காணாத அளவில் முதல் முறையாக 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர் அளவு வெகுவாக அதிகரித்தது. நேற்று காலை 9 மணியிலிருந்து ஏரிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வந்தது.
பின்னர் நேரம், செல்லச் செல்ல 30 ஆயிரம் கன அடிநீர் வந்தது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,160 மி.கன அடி. தற்போது ஏரிக்கு வரும் முழு அளவு நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது. அதன்படி நேற்று பிற்பகல் முதல் ஏரியிலிருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஏரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டது. கடைசியாக கடந்த கன மழைக்கு 18 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டதே அதிகபட்ச அளவாக இருந்து.
கரையோரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி அறிவுறுத்தினர். இதையடுத்து நேற்று காலை முதல் வேறு வழியில்லாமல் மக்கள் வீடுகளை காலிசெய்து சோகத்துடன் வெளியேறினர்.
|
80000 கனஅடிநீர்
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 30000 கனஅடி நீர் திறக்கப்பட்டதாலும், பிற நீர் நிலைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அப்படியே அடையாற்றில் கலப்பதாலும் அடையாற்றில் 80000 கனஅடி நீர் வெளியேறுகிறது. இதனால் அடையாறு ஆற்றில் வரலாறு காணத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
|
சைதாப்பேட்டை பாலம்
அடையாற்றில் வெள்ள கரைபுரண்டு ஓடுவதால் சைதாப்பேட்டை பாலத்தின் மீது வெள்ளநீர் பாய்ந்து வருகிறது. பாலம் எந்த நேரத்திலும் உடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால், பாலத்தின் வழியாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தை யாரும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
|
கோட்டூர்புரம் பாலம்
சென்னை சைதை, காசிதியேட்டர், கோட்டூபுரம் அடையாற்று பாலங்கள் மீது வெள்ள நீர் பாய்ந்தோடுகிறது. அடையாற்று வெள்ளத்தால் காசி தியேட்டர், கோட்டூபுரம் பாலங்கள் முழுவதுமாக மூழ்கி வெள்ளநீர் பெருகியுள்ளது. இதனால் இந்த பாலங்கள் மீது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
|
திரு.வி.க பாலம்
அடையாறு திரு.வி.க பாலத்திலும் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அடையாறு பாய்ந்தோடும் பாலங்களில் எல்லாம் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் சின்னச் சின்ன தீவுகளாக மாறியுள்ளன.
|
நீர் திறப்பு குறைப்பு
இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி என்ற அளவிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications