மிரட்டும் வெள்ளம்... படிப்பதில் பிடிவாதம்... படகில் பள்ளிக்குப் போகும் மாணவர்கள்...
வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் வெள்ளம் சூழ்ந்துள்ளபோதும் கல்வி கற்றாக வேண்டும் என்பதற்காக படகில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
வேதாரண்யம் அருகே உள்ள வண்டல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் அருகே உள்ள அவரிக்காடு பள்ளிக் கூடத்துக்கு சென்று படித்து வந்தனர்.
ஆனால் பருவமழையால் வண்டல் கிராமம் வெள்ளத்தில் மிதந்தது. இதனால் பள்ளிக்கூடம் செல்லாமல் கிராமத்திலேயே முடங்கிக் கிடக்க மாணவர்கள் விரும்பவில்லை.
மழை வெள்ளம் வடியும்வரை வெளி இடங்களுக்குச் செல்ல பொதுமக்கள் மீன்பிடி படகை பயன்படுத்த தொடங்கினர். பின்னர் அரசே படகையும் இயக்கியது.
மாணவர்களும் படித்தே ஆக வேண்டும் என்பதற்காக படகுகளில் பயணித்து பள்ளிக்கூடம் சென்று வந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக ஆசிரியர்களும் வந்து சென்றனர். இந்நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களிடம் படகு கட்டணமாக ரூ10 வசூலிப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ஒரு புகாரும் போனது.
இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் கல்வித்திட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி பார்வதி அவரிக்காடு கிராமத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வண்டல் கிராமத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் அவுரிக்காடு செல்லும் வகையில் படகு இயக்கப்படுகிறது.
இந்த படகில் பயணம் செய்யும் மாணவ, மாணவிகள், பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது; படகில் பயணம் செய்யும் மாணவர்கள் பாதுகாப்புக்காக ஆசிரியர் ஒருவர் உடன் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்