கொள்ளிடத்தில் வெள்ளம்..சிதம்பரத்தில் தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள் - மூழ்கிய பயிர்கள்
சிதம்பரம்: சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 150 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளத்தால் பயிர்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 1,500 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் வினாடிக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நிலவரப்படி வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் சென்றது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது. 1500 வீடுகளுக்கு மேல் நீரால் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வினாடிக்கு 4 லட்சம் கனஅடி தண்ணீர் செல்லும் வகையில் பரந்து விரிந்து காணப்படும் கொள்ளிடம் ஆறு ஆக்கிரமிப்பாலும், சரியாக தூர்வாரப்படாததாலும் 2 லட்சம் கனஅடி தண்ணீரை கூட வெளியேற்ற முடியாமல், தனது வழக்கமான வழிதடத்தில் இருந்து திசை மாறி கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் சிதம்பரம் பகுதியில் கொள்ளிடம் கரையோரம் உள்ள திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், கீழதிருக்கழிப்பாளை, சின்ன காரமேடு, வீரன் கோவில் திட்டு, எருக்கன்காட்டுப்படுகை உள்ளிட்ட பகுதிக்களுக்குள் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக தெருக்கள் அனைத்தும் ஆறாக மாறியது. இதனால் அந்த கிராமங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
தாழ்வான பகுதியில் இருந்த பல்வேறு வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு, புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கள் வைக்கப்பட்டுள்ளதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளின் மாடியிலும், அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். இருப்பினும் வீடுகளில் உள்ள அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, குடிநீர், மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விளைநிலங்களுக்குள்ளும் புகுந்த வெள்ளத்தால் பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே காட்டுமன்னார்கோவில் அருகே குணவாசல் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான 2 மாடுகள் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு மேய்ச்சலுக்காக சென்றன. ஆனால் மாடுகள் திரும்பி வருவதற்கு முன்னர், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மாடுகள் வீட்டிற்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மாடுகள் வெள்ளத்தில் நீந்தி உரிமையாளரின் வீட்டை தேடி வந்தது. இதைபார்த்த சுப்பிரமணியனின் குடும்பத்தினர் மாடுகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications