அட்டப்பாடியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்... அடித்துச் செல்லப்பட்ட தம்பதி மீட்பு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தம்பதி மீட்கப்பட்டனர்.
Recommended Video
கோவை: கோவை-கேரளா எல்லைப் பகுதியான அட்டப்பாடியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கணவன்-மனைவியை தீயணைப்பு துறையினர் துரித வேகத்தில் செயல்பட்டு முதலுதவி அளித்து அவர்களது உயிரை காப்பாற்றி உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு கேரளா மாநிலம் வழியாக சென்று மீண்டும் தமிழக பகுதிக்குள் வருகின்றது. கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் செல்லும் பவானி ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அட்டப்பாடி பகுதியில் உள்ள தாவளம் இடத்தில் உள்ள தரைப்பாலத்திற்கும் மேலாக சென்று கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் இன்று காலை சாவடியூர் தரைப்பாலத்தை கடந்த தம்பதியினர் இருவரை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் வனத்துறை, மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து விரைந்து சென்று மரத்தில் சிக்கி இருந்த இருவரையும்,கயிறு கட்டி மீட்டனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
இந்த தண்ணீர் பில்லூர் அணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் வழியாக செல்கின்றது. கோவை பகுதியில் மழை குறைந்து இருந்தாலும் நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளா பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்றே தெரிகின்றது.