சென்னையில் வெள்ளம் வெகுவாக வடிந்தது.. சகஜ நிலை திரும்புகிறது
சென்னை: சென்னையிலும், புறநகர்களிலும் முக்கியச் சாலைகளில் தேங்கி நின்ற வெள்ள நீர் வடிந்து வருவதாகவும், போக்குவரத்து, இயல்பு வாழ்க்கை சீரடைந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதேசமயம், புறநகர்களிலும், சென்னையின் சில தாழ்வான பகுதிகளிலும் தொடர்ந்து மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக மேற்குத் தாம்பரம் உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ந்து வெள்ள நீர் முழுமையாக வடியாமல் உள்ளது. இதனால் அங்குள்ள வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் இன்னும் திரும்பாமல் உள்ளனர்.
சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக உட்புற சாலைகள் மட்டுமின்றி முக்கியமான சாலைகள் அனைத்திலுமே மழை வெள்ளம் தேங்கியது. இதனால் பெரம்பூர் ஜமாலியா, புரசைவாக்கம், அண்ணாநகர், புளியந்தோப்பு, வில்லிவாக்கம், கோயம்பேடு, வடபழனி, வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முக்கியச் சாலைகள், தெருக்கள் வெள்ளத்தில் மிதந்தன.
சாலையின் இரு புறங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது பெருமளவில் வெள்ளம் வடிந்து விட்டது. போக்குவரத்தும் சீரடைந்து வருகிறது.
அதேசமயம், புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி பாலம் உள்ளிட்ட சில சுரங்கப் பாதைகளில் இன்னும் மழை நீர் வடியாமேல் உள்ளது. அதைச் சரி செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
முக்கியச் சாலைகள் சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதால், மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். அதேசமயம், பல முக்கியச் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனத்தை ஓட்டுவதில் சிரமம் இருப்பதாக வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள்.