குமரியில் கனமழை.. குழித்துறை அருகே அரசு பொருட்காட்சியில் புகுந்த வெள்ளநீர்.. வாட்டர் பார்க்கான அவலம்
குழித்துறை: குமரியில் கனமழை பெய்து வருவதால் குழித்துறையில் அரசு பொருட்காட்சியில் வெள்ளநீர் புகுந்தது.
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது.
இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருகிறது. இதனால் நெல்லை, குமரி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளத்திலும் கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லையில் உள்ள நீர்நிலைகள் நிரம்பின.
இந்நிலையில் மேற்கண்ட மாவட்டங்களிலும் நீர் நிலைகள் கடல்போல் காட்சியளிக்கின்றன. குழித்துறையில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தையொட்டி வாவுபலி பொருட்காட்சி நடைபெறும்.
குழித்துறையாறு (தாமிரபணி ஆறு) அருகே இந்த பொருட்காட்சி நடைபெறும். இந்த முறையும் இந்த பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது குழித்துறையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பால் ஆற்று வெள்ளம் பொருட்காட்சியை மூழ்கடித்து விட்டது. மேலும் ஆற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள சப்பாத் பாலமும் மூழ்கியது.