தேர்தல் கண்காணிப்பால் “முட்டை லாரிக்கு” வந்த ஆபத்து
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் முட்டை லாரியை மடக்கி பிடித்தனர். உரிய ஆவணங்களை லாரி உரிமையாளர் ஆன்லைனில் பெற்று கொடுத்ததால் பின்னர் விடுவித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்களுக்கு பணம், நகை, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தாசில்தார் வல்லிக்கண்ணு தலைமையிலான போலீசார் காலை 6 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இருந்து தூத்துக்குடிக்கு 50 ஆயிரம் முட்டைகளை ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். உரிய ஆவணங்கள் இன்றி முட்டையை ஏற்றி வந்தது தெரிய வந்தது.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவர்களுக்கு பிரியாணி தயாரிக்கத்தான் முட்டை கொண்டு செல்லப்படுகிறதா என்று தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து லாரி டிரைவர் நாமக்கல்லை சேர்ந்த முத்துசாமி என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் பதில் முன்னுக்கு பின்னாக இருந்ததால் முட்டை லாரியை பறிமுதல் செய்து முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்தனர்.
இதையடுத்து லாரி டிரைவர் தனது நிறுவன உரிமையாளரிடம் பேசி இமெயில் மூலம் ஆவண நகலை பெற்றார். அதை போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் காண்பித்ததை தொடர்ந்து முட்டை லாரியை அதிகாரிகள் விடுவித்தனர். இ்ந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.