ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக.. ஒரு "பளார்" புகார்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் வரலாற்றிலேயே முதல் முறையாக அவர் மீது ஒரு தாக்குதல் புகார் வந்துள்ளது. ஒட்டுமொத்த அதிமுகவினரையும் அதிர வைத்துள்ள சம்பவத்தால் தேசிய அளவிலும் பரபரப்பைக் கிளப்பி விட்டுள்ளார் சசிகலா புஷ்பா.
இதுவரை ஜெயலலிதா தன்னை அடித்ததாக யாருமே புகார் கூறியதில்லை. அவருடனேயே இருந்து அவருக்கு மிகப் பெரிய விசுவாசிகளாக இருந்து பின்னர் திமுகவுக்கோ பிற கட்சிகளுக்கோப் போனவர்கள் கூட ஜெயலலிதா மீது இப்படி ஒரு புகாரைக் கூறியதில்லை.
ஆனால் அதிமுகவினரே ஆடிப் போகும் அளவுக்கு, என்னை ஜெயலலிதா அடித்தார், எப்படி என்னை அடிக்கலாம் என்று கேட்டு அதிர வைத்து விட்டார் தூத்துக்குடி சசிகலா புஷ்பா.
வரலாறு காணாத புகார்
ஜெயலலிதாவை பெரும்பாலும் அதிமுகவினர் அம்மா என்றுதான் பாசமுடன் அழைக்கின்றனர் - வயது வித்தியாசம் இல்லாமல். "அம்மா"வின் அன்புக்கு நிகரானது எதுவும் இல்லை என்பது அதிமுகவினரின் ஏகோபித்த தீர்ப்பு.
கண்டிப்பும் கறாரும்
அதேசமயம், ஜெயலலிதா மிகவும் கண்டிப்பானவர். தப்பென்று தெரிந்தால் யாராக இருந்தாலும் தூக்கி வீசி விடுவார். இதுவும் அதிமுகவினருக்குத் தெரியும். "அம்மா" எந்த அளவுக்கு அன்பும், பாசமும், நம்பிக்கையும் வைக்கிறாரோ அதற்கு யாராவது குந்தகம் விளைவித்தால் அவர்களிடம் கடுமையான கண்டிப்பு காட்டவும் அவர் தயங்க மாட்டார் என்பது அதிமுகவினரின் கூற்றாகும்.
அடித்ததாக வந்த முதல் புகார்
ஆனால் ஜெயலலிதா தன்னை அடித்ததாக அவர் மீது முதல் முறையாக புகார் வந்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதுவரை யாருமே இப்படிப்பட்ட புகாரை ஜெயலலிதாவுக்கு எதிராக கூறியதில்லை கூறத் துணிந்ததும் இல்லை.
சேகர்பாபு - கராத்தே தியாகராஜன்
சசிகலாவை விட பல மடங்கு அளவுக்கு ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்தவர்கள் பி.கே.சேகர்பாபு, கராத்தே தியாகராஜன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர். அவர்களை தனது தளபதிகளாகவே நடத்தி வந்தவர் ஜெயலலிதா. அவரது கண்ணசைவுக்கு ஏற்ப செயல்பட்டவர்கள் இவர்கள்.
அவர்கள் கூட சொல்லலையே!
ஆனால் இவர்கள் எல்லாம் ஒரு நல்ல நாளாக பார்த்து அதிமுகவை விட்டு விலகிப் போனபோதும் கூட, ஜெயலலிதா குறித்து தவறாகவோ, அவர் அடித்ததாகவோ, திட்டியதாகவோ எந்தப் புகாரையைும் கூறியதில்லை. திமுக மேடையில் எந்த இடத்திலும் ஜெயலலிதா குறித்து அவதூறாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை சேகர்பாபு.
ஏன் சசிகலா மட்டும்?
அப்படி இருக்கும்போது, அவர்கள் யாருமே சொல்லாத புகாரை, தன்னை அடித்ததாக சசிகலா புஷ்பா மட்டும் கூறியிருப்பதுதான் அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.. யோசிக்கவும் வைத்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு சவாலா?
இதுவரை இப்படிப்பட்ட புகாரை ஜெயலலிதா ஒருமுறை கூட பொதுவாழ்வில் இவ்வளவு பகிரங்கமாக சந்தித்தில்லை. ஆனால் எத்தனையோ பிரச்சினைகளைப் பார்த்த அவர் இதையும் ஊதித் தள்ளி விடுவார் என்றே அதிமுகவினர் கூறுகின்றனர்.