ஆலந்தூர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராகிறார் தா.மோ. அன்பரசன்?
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சப தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள 1 தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந்தேதி தேர்தல் நடை பெறுகிறது. இதனுடன் சேர்த்து தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஆலந்தூர் நகரக் கழகச் செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திமுக வேட்பாளர்
தி.மு.க. தரப்பில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் போட்டியிடலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் தா.மோ.அன்பரசன் ஆலந்தூர் தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.
இவர் மாவட்டச் செயலாளராக இருப்பதால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இவரது வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவார்கள் என்றும் வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
நகர செயலாளருக்கு வாய்ப்பு
லோக்சபா தேர்தலில் இவரது பணி அவசியம் என தி.மு.க. மேலிடம் கருதினால் ஆலந்தூர் நகரச் செயலாளர் குணாளன், அல்லது குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தேமுதிக வேட்பாளர்
தே.மு.தி.க. தரப்பில் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் அல்லது பகுதி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டம் ஆகியோரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என தெரிகிறது. திமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி இணைந்தால் நிலைமை மாறலாம்.
ஆம் ஆத்மி வேட்பாளர்
ஆம் ஆத்மி கட்சியும் ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் லெனின் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், பாமக நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
இதனால் லோக்சபா தேர்தலை போல் ஆலந்தூர் தொகுதி இடைத்தேர்தலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.