ஜெ.வின் குட்புக்கில் ஜெயக்குமார்- மகன் ஜெயவர்தன் தென்சென்னை வேட்பாளரானார்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுடன் முறைத்துக் கொண்டு சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போன ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தென் சென்னை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2012ஆம் ஆண்டு தமிழக சட்டசபை வைர விழா கொண்டாட்டத்துக்கு தயாராக இருந்தது. அப்போது அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. வைர விழா கொண்டாட்ட நேரத்தில் சபாநாயகராக இருந்த ஜெயக்குமார் திடீர் ராஜினாமா செய்யதார்.
இந்த ராஜினாமாவுக்கு பல காரணங்கள் உண்டு. 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியன்று ஜெயக்குமாரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சென்னையை மிரட்டின. ஜெயக்குமாரின் பிறந்த நாளை பிரம்மாண்டப்படுத்திய 12 பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
அதேபோல் மேயர் சைதை துரைசாமிக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. சென்னை மாநகராட்சியில் ஜெயக்குமார் ஆதரவு கவுன்சிலர், மேயரை எதிர்த்து கேள்வி கேட்க அதுவும் ஜெயலலிதாவுக்கு கோபத்தை அதிகரித்தது. இதையடுத்து போயஸ் தோட்டத்துக்கு ஜெயக்குமார் வரவழைக்கப்பட்டு டோஸ் விடப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜெயக்குமார் ராஜினாமா அரங்கேறியது.
அதன் பின்னர் அதிமுக நிகழ்ச்சிகள், சட்டசபை நிகழ்ச்சிகளில் ஜெயக்குமார் தனிமைப்படுத்தப்பட்டவராகவே இருந்து வந்தார். இந்த நிலையில் அண்மையில் சென்னையில் 4 எம்.எல்.ஏக்களின் வீட்டு திருமண நிகழ்ச்சியை ஜெயலலிதா நடத்தி வைத்தார்.
இதில் ஜெயக்குமாரின் இளைய மகன் ஜெயவர்தனின் திருமணமும் ஒன்று. அந்த ஜெயவர்தன்தான் இப்போது தென் சென்னை தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் எம்.பி.பி.எஸ் படித்தவர். எம்.டி. படித்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக தென் சென்னையில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் கட்சிகள் வேட்பாளராக நிறுத்த முன்வரும். கடந்த முறை பாமக கூட்டணியில் இடம்பெற்றதால் அதிமுக வேட்பாளராக இருந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் எளிதாக வெல்ல முடிந்தது.
ஆனால் இம்முறை மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஜெயவர்தனை தென் சென்னை வேட்பாளராக்கியுள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.