பிரான்ஸ் தினம் கொண்டாட்டம்.. புதுச்சேரியில் கோலாகலம்
Recommended Video
புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டின் 229வது தேசிய தினம், புதுச்சேரியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பிரெஞ்சு வசம் முன்பு இருந்த பகுதிதான் புதுச்சேரி. பின்னர் இந்தியாவுடன் இணைந்து விட்டாலும் கூட, பிரெஞ்சு தேசிய தினம் உள்ளிட்டவை இங்கும் விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
புதுச்சேரியிலுள்ள போர் நினைவுச் சின்னத்திற்குச் சென்று பிரெஞ்சுக்காரர்கள், அங்குள்ள வீரர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நினைவிடத்தை பிரான்ஸ் அரசே பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் வசித்து வரும் பல்வேறு முன்னாள் பிரெஞ்சு ராணுவ, அரசு அதிகாரிகளும் இங்கு அஞ்சலி செலுத்தினர். பல்வேறு பிரான்ஸ் அமைப்புகள், பள்ளிக் கூடங்கள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி காவல்துறையின் பான்டு வாத்தியப் பிரிவினர் புதுச்சேரி மற்றும் இந்திய தேசிய கீதங்களை இசைத்தனர். பிரெஞ்சு அலுவலகம் எதிரே இன்று இரவு 8.15 மணிக்கு வான வேடிக்கை நடத்தப்படுகிறதாம். இதேபோல காரைக்காலிலும் பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாடப்பட்டது.
பிரெஞ்சுப் புரட்சியின் தொடக்கத்தைதான் தேசிய தினமாக பிரான்ஸ் மக்கள் கொண்டாடுகின்றனர். 1789ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பாரீஸில் உள்ள பாஸ்டில் சிறைச்சாலைக்குள் மக்கள் படையெடுத்துப் புகுந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவித்தனர். அன்று தொடங்கியது பிரெஞ்சுப் புரட்சி. அதை நினைவு கூறும் வகையில்தான் இந்த தேசிய தினம் (Bastille day) கொண்டாடப்படுகிறது.