விவசாயிகளை பாதிக்கும் கெயில் திட்டம் எதுக்கு.. வேண்டாம்.. வேல்முருகன் திட்டவட்டம்
தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தைப் போல கெயில் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று வேல்முருகன் கோரியுள்ளார்.
தருமபுரி: தமிழகத்தில் மீத்தேன் திட்டத்திற்கு எழுந்த கடும் எதிர்ப்பார்பால் ரத்து செய்யப்பட்டதை போல கெயில் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கோரியுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு 871 கி.மீ. தொலைவுக்கு குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டத்தை இந்திய எரிவாயு ஆணையம் என்ற கெயில் அமைப்பு செயல்படுத்தி வருகிறது. கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய 3 மாநிலங்கள் வழியாக குழாய்கள் செல்கிறது.
இதற்காக 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு செலவிடப்படுகிறது. தமிழகத்தில் 504 கி.மீ. தொலைவுக்கு இந்தக் குழாய் பதிக்கப்படுகிறது. இத்திட்டத்தால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் 134 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளதால் இதற்கு விவசாயிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே தேனி மாவட்டத்தில் தொடங்க இருந்த மீத்தேன் திட்டத்தை, மக்களின் கடும் எதிர்ப்பார்ப்பால் கைவிட்டது போல கெயில் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று தருமபுரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும், கறுப்புப் பணத்தை ஒழிக்கவும் பிரதமர் மோடி கொண்டு வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வரவேற்பதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும், இதே போல் இணைய சூதாட்டத்தையும் தடை செய்ய வேண்டும் என்று வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.