புழல் டூ வேலூர் சிறை - தாக்குதல் அச்சத்தில் ராக்கெட் ராஜா
வேலூர் சிறைக்கு ரவுடி ராக்கெட் ராஜா மாற்றப்படுகிறார்.
Recommended Video
சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜாவைப் புழல் சிறையில் ரிமாண்ட் செய்துள்ளனர் போலீஸார். ' இப்போது வேலூர் சிறைக்கு அவரை மாற்றப் போவதாக அதிகாரிகள் சொல்கின்றனர். என்கவுண்ட்டர் செய்யாமல், சிறைக்குள்ளேயே ராக்கெட் ராஜா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் எங்களுக்குத் தகவல்கள் வந்துள்ளன' என்கின்றனர் அவரது தரப்பினர்.
வெங்கடேஷ் பண்ணையாரின் வலதுகரமாக இருந்த ராக்கெட் ராஜாவை, தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்தனர். என்கவுண்ட்டரில் கொல்வதற்குப் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
அதற்காகத்தான் அவரை எங்கோ மறைத்துவைத்துள்ளனர் என ராக்கெட் ராஜா தரப்பினர், வாட்ஸ்அப் தகவல்களை வெளியிட்டனர். விருகம்பாக்கத்தில் ராக்கெட் ராஜா வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வந்ததையடுத்து, அங்கேயும் அவரது தரப்பினர் குவிந்தனர்.
கடந்தாண்டு பேராசிரியர் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் சசிகலா புஷ்பாவுக்கு எதிராகச் செயல்பட்ட வழக்கறிஞர் ஒருவரது வீட்டைத் தாக்கிய வழக்கிலும் ராக்கெட் ராஜா மீது வழக்குகள் பாய்ந்தன. கொலை மிரட்டல், ஆள்கடத்தல் வழக்குகளில் கர்நாடக போலீஸாரும் ராஜாவைத் தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் இருந்த ராஜாவைத் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, தீவிர விசாரணைக்குப்பின் புழல் சிறையில் அவரை அடைத்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ராக்கெட் ராஜா தரப்பு வழக்கறிஞர் ஒருவர், " புழல் சிறைக்குள் ராஜாவைக் கொண்டு சென்றபோது, அங்கிருந்த சிறை அதிகாரிகள் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டனர். நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகுதான் சிறைக்குள் அனுமதித்தனர்.
இதைப் பற்றி போலீஸார் கேட்டபோது, ' இங்கு அடைத்தால் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அவரை வேறு சிறைக்கு மாற்றுங்கள்' எனத் தெரிவித்தனர். இதையடுத்து, உயர் அதிகாரிகளின் தலையீட்டின்பேரில் புழலுக்குள் அவரை அடைத்தனர்.
இந்தநிலையில், இன்று காலையில் ராக்கெட் ராஜாவை வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லும் வேலைகள் நடந்து வருகின்றன. சென்னையில் பதிவான வழக்குக்கு, புழல் சிறையில் அடைப்பதுதான் சரியானது. வேலூரில் அவர் மீது எந்த வழக்குகளும் இல்லை. நெல்லை மாவட்டத்தில் பேராசிரியர் கொலை வழக்கு உள்ளது. இதற்கு சம்பந்தம் இல்லாத வகையில் வேலூருக்குக் கொண்டு செல்வதன் பின்னணியில் சதிவேலைகள் உள்ளன" என விவரித்தவர், " ராக்கெட் ராஜாவை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றால், அரசு மீது அதிருப்தி ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக, சிறை வளாகத்திலேயே சில மோதல்களை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம்.
கைதிகளை ஏவிவிட்டு, ராஜா மீது தாக்குதல் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதன் ஒருபகுதியாகத்தான் வேலூர் சிறைக்கு அவரை மாற்றுகின்றனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தும், சிறை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். ராஜா மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளையும் அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். இதனை சட்டரீதியாக எதிர்ப்பதைத் தவிர எங்களுக்கு வேறுவழியில்லை" என்றார்.
ராக்கெட் ராஜா கைது சம்பவத்துக்கு, அரசியல்ரீதியாக எந்தவித எதிர்ப்புகளும் கிளம்பவில்லை. அவருடைய அமைப்பின் நிர்வாகிகள் மட்டுமே எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். ' கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், கொலை மிரட்டல் என தென்மாவட்டங்கள் மட்டுமல்லாமல், பக்கத்து மாநிலங்களிலும் தலையைக் காட்டி வந்தார் ராஜா.
இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது என்பதால்தான் போலீஸார் தீவிரமாக அவரைத் தேடி வந்தனர். அவர் மீதான வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதுதான் எங்கள் நோக்கம். சிறையில் ஆபத்து என்றெல்லாம் சிலர் தகவல் பரப்புகின்றனர். அப்படி எதுவும் நடக்கப் போவதில்லை' என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்.