மை வச்சா மட்டும் போதாது... நாமம் போடுங்க... பச்சை குத்துங்க- சில யோசனைகள்
கறுப்பு பணத்தை வங்கிகளில் கொண்டு வந்து மாற்றிச் செல்வதை தடுக்க வங்கி வாடிக்கையாளர்கள் கையில் பச்சை குத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பபட்டுள்ளது.
சென்னை : 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து மூட்டை மூட்டையாக கறுப்பு பணத்தை சேமித்து வைத்திருந்தவர்கள் பலருக்கும் தூக்கம் தொலைந்து போனது.
வீட்டுக்காரருக்கு தெரியாமல் சேர்த்து வைத்திருந்த சில ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எப்படி மாற்றுவது என்ற யோசனையிலேயே சமையலில் உப்பு போட மறந்து விடுகின்றனர். மாமியாருக்குக் கூட தெரியாமல் பணத்தை மாற்ற வேண்டுமே என்று பரபரப்பில் இருப்பவர்களுக்கு மத்தியில் தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது மத்திய அரசு.
கூட்டம் கூட்டமாக வங்கி வாசலுக்கு படையெடுத்து வருபவர்களை தடுக்க என்ன செய்யலாம்? என்று யோசித்ததன் விளைவாக, பணத்தை டெபாசிட் செய்யாமல் மாற்றிக்கொண்டு மட்டும் செல்பவர்களை தடுக்கும் வகையில் 4500 ரூபாய் மாற்றுபவர்களின் கை விரலில் மை வைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். மை வைப்பதை விட மேலும் சில யோசனைகளை தெரிவித்துள்ளோம்... முடிந்தால் இதை அமல்படுத்தலாம். ஓட்டு போட்ட மக்கள் நாட்டு நன்மைக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள் என்பது பிரதமர் மோடிக்கு தெரியாதா என்ன?
வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை இனி என்னவெல்லாம் செய்யலாம்? சில யோசனைகள்:
- அழியாத மை கொண்டு நெற்றியில் நாமம் போட்டு விடலாம்.
- வங்கி வாசலில் பச்சை குத்துபவர்களை அமரவைத்து உள்ளங்கையில் பச்சை குத்தி விடலாம்
- மெகந்தி போடுபவர்களை அழைத்து வந்து அடையாளமாக தாமரையை கைகளில் வரையச் செய்யலாம்
- கை விரலில் மை வைத்தால் அது தேர்தலில் நேரத்தில் நினைவுக்கு வந்து ஓட்டுக்களை மாற்றி போட வேண்டியது வரலாம். எனவே கை விரலுக்கு பதிலாக எளிதாக தெரியும் வகையில் முகத்தில் வைக்கலாம்
- மூக்கு, காது குத்துவது போல நாக்கில் ஏதாவது அடையாளம் குத்தி விடலாம். எப்பவுமே அழியாது
- சம்பாதித்த பணத்தை செலவு செய்ய முடியாமல் தவித்து அதை வங்கியில் மாற்ற வந்தால் மை வைக்கிறாங்களாம்ல மையி... என்பதே பொதுஜனங்களின் கேள்வியாக உள்ளது.