தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் அநியாய அபராத மசோதா... திரும்பப் பெற ஜிகே வாசன் கோரிக்கை
எல்லை தாண்டிடும் தமிழக மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரசின் தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.
வேலூர்: கடல் எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீதான அபராத மசோதாவை இலங்கை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கோரியுள்ளார்.
இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஜி.கே.வாசன், " மீனவர்கள் பிரச்சனையில் இந்தியாவை இலங்கை அரசு ஆதிக்கம் செய்வதை ஏற்கமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மழைக்காலங்களில் தமிழக ஆறுகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் கடலில் கலப்பதைத் தடுக்க தமிழக அரசு தடுப்பணை கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தில், எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு அதிக அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டம் ஏற்புடையது அல்ல என்று அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், ஜிகே வாசன் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரும் இலங்கை அரசு கொண்டு வந்துள்ள தமிழக மீனவர்கள் விரோத சட்டத்தை எதிர்த்துள்ளனர். இதனால் இலங்கை அரசுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது.
இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழக மீனவர்களை பாதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு வலியுறுத்தும் என்று கூறியுள்ளார்.