ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது.. திருச்சியில் கொடும்பாவி எரிப்பு!
திருச்சி: தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியுள்ளன. முதல் போராட்டம் திருச்சியில் நடந்துள்ளது.
திருச்சியில் கூடிய ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் இளங்கோவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஜி.கே.வாசன் ஆதரவாளரான ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து பொருளாளர் கோவைத் தங்கமும் விலகினார். இதையடுத்து புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கட்சி மேலிடம் நியமித்தது. இன்று இளங்கோவன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரிடம் பதவி விலகிய தலைவர் ஞானதேசிகன் கணக்கு வழக்கு லெட்ஜரைக் கொடுத்து பொறுப்புகளை ஒப்படைத்தார்.
முன்னதாக நேற்று ஜி.கே.வாசனை நேற்று சந்தித்துப் பேசினார் இளங்கோவன்.
இந்த நிலையில் இளங்கோவன் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருச்சியில் வாசன் ஆதரவாளர்கள் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.