தீவிர விசாரணைக்குப் பின் யுவராஜுக்கு ஒரு நாள் சிறை.. மீண்டும் காவலில் எடுக்கிறது போலீஸ்
சேலம்: பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யுவராஜ், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்குப் பின் நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் மற்றும் திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்தவர் மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ். 107 நாட்கள் தலைமறைவாக இருந்த யுவராஜ், வாட்ஸ் அப் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு தலைமறைவாக இருந்தபடியே பேட்டியளித்து வந்தார்.
ஞாயிறன்று நாமக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடையப்போவதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் சொல்லியிருந்தார் யுவராஜ். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் காலையில் இருந்தே சிபிசிஐடி அலுவலகத்தை சுற்றிலும் குவிந்திருந்தனர். போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். 10.30 மணிக்கு எந்த பக்கத்திலிருந்து வருகிறார், எந்த வாகனத்தில் வருகிறார் என்று எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். சிபிசிஐடி அலுவலகத்திற்குள் நுழைந்து சரண்டைவதற்குள் அவரை கைது செய்துவிடவேண்டும் என்று போலீசார் நினைத்தனர்.
ஆனால் அது நடக்கவில்லை. 11 மணிக்கு டிவிஎஸ் - 50 வண்டியில், முன்னால் ஒருவர் டூவீலரை ஓட்டிக்கொண்டு வர, பின்னால் உட்கார்ந்துகொண்டு, மாறு வேடத்தில் வந்து இறங்கினார் யுவராஜ். லுங்கி கட்டிக்கொண்டு, கறுப்பு நிற டீ சர்ட் போட்டுக்கொண்டு, தலையில் சிகப்பு நிற தொப்பி போட்டுக்கொண்டு வந்திறங்கிய யுவராஜை அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை.
வண்டியில் இருந்து இறங்கியதும், லுங்கி, டீ.சர்ட் தொப்பியை அகற்றிவிட்டு, உள்ளே ஏற்கனவே போட்டிருந்த வெள்ளை சட்ட உடையுடன் விறுவிறுவென்று நடந்தார். அவரை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு, போலீஸ் பிடியில் சிக்காதவாறு, சிபிசிஐடி அலுவலகத்திற்குள் சென்றார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட யுவராஜிடம், 12 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
மருத்துவ பரிசோதனைக்கு பின் நேற்றிரவு நாமக்கல் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலர்மதி, அவரை ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, யுவராஜ் நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், யுவராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.