தங்கம் விலை கிராமுக்கு ரூ. 2000 வரை உயரலாம்... பீதி கிளப்பும் நகை வியாபாரிகள்!
மக்கள் தங்கம் வாங்க அதிக ஆர்வம் காட்டுவதால், இன்னும் மூன்று நாட்களுக்கு தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் கீர்த்திலால் தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்கள் தங்கம் வாங்க அதிக ஆர்வம் காட்டுவதால், இன்னும் மூன்று நாட்களுக்கு தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் கீர்த்திலால் தெரிவித்துள்ளார். கிராமுக்கு ரூ. 2 ஆயிரம் வரை உயரலாம் என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனி பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால், தங்கள் கைவசம் உள்ள பணத்தை தங்கமாக மாற்ற மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று இரவு முதலே மக்கள் நகைக்கடைகளை மொய்த்து வருகின்றனர். இதனால் சென்னை உட்பட பல இடங்களில் இரவு முழுவதும் நகைக்கடைகள் திறந்திருந்தன. கைவசம் உள்ள ரொக்கப்பணம் மட்டுமின்றி, வங்கிகளில் உள்ள சேமிப்பையும் தங்கமாக முதலீடு செய்ய அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு சவரனுக்கு ரூ.1,456 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று சில்லறை விற்பனையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.182 உயர்ந்து ரூ.3,060க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.24,450க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.3,166க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து 48.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.910 உயர்ந்து, ரூ.44,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்த விலை மேலும் மூன்று நாட்களுக்கு உயர்ந்தே காணப்படும் என தங்க வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் கீர்த்திலால் தெரிவித்துள்ளார்.
மேலும், 'ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்ற தங்கத்தை பொதுமக்கள் வாங்குவதால் விலை உயர்வு' எனத் தெரிவித்துள்ள அவர், ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ2,000 வரை உயரலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை மேலும் உயரலாம் என்ற தகவலாலும், நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.