மதுரையில் ஹைகோர்ட்.. திருச்சியில் சட்டசபை.. சென்னையில் "சி.எம்" மட்டும்.. பிரச்சினை குறையும்!
சென்னை: சென்னையை கூறு போட்டு, அத்தனை அதிகாரத்தையும் அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து ஆங்காங்கு அனுப்பி வைத்தால் மட்டுமே சென்னை உயிர் தப்ப இனி வாய்ப்புண்டு. இல்லாமல் போனால் மக்கள் பெருக்கம் அதிகரித்து, நகரம் மேலும் மேலும் நாசமாகவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
சில உலக நாடுகளைப் பார்த்து அங்கு அமலாக்கப்படும் நடைமுறைகளை சென்னைக்கும் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் மிகப் பெரிய சிக்கல்களையும், ஆபத்துகளையும் எதிர்காலத்தில் சென்னை சந்திக்க நேரிடும்.
இப்போது வந்த பெரு வெள்ளத்தையே சென்னையால் சமாளிக்க முடியாமல் திணறிப் போய் விட்டது. இதை விட பெரிய மழை வந்தால் சென்னை என்னாகுமா.. இதைத் தவிர்க்க சில பல நடவடிக்கைகளை புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. இதுகுறித்து மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி "தி வயர்" இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ள சில கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு:
குழாயை நிறுத்தாமல் தரையைத் துடைத்தால் எப்படி
ஒழுகும் குழாயை நிறுத்தாமல் தரையைத் துடைத்தால் என்ன புண்ணியம். அதேதான் சென்னை விஷயத்திலும் நடக்கிறது, சிக்கல்களின் மூலத்தை ஆராயமல் தீர்வுக்காக அத்தனை பேரும் அலை பாய்கிறோம்.
மழை மீது தவறே இல்லை
பெருமழை பெய்து விட்டது. நாசமாகி விட்டது என்று புலம்புகிறோம். மழையை நாம் குறை சொல்லவே முடியாது. அது அதன் வேலையைச் செய்கிறோம். நாமோ நாம் செய்த "வேலை"யால் இன்று அவஸ்தைப்படுகிறோம்.
எல்லாவற்றையும் ஆக்கரமித்தாகி விட்டது
ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை முன்னோர்கள் சும்மா வெட்டி வைக்கவில்லை. மிகுந்த நுண்ணறிவுடன், பட்டறிவுடன் வெட்டி வைத்தார்கள். ஆனால், ஆனால் அதையபும், அதிலிருந்து ஆறுகளுக்கும், கடலுக்கும் போகும் கால்வாய்களையும் நாம் மொத்தமாக ஆக்கிரமித்து அழித்து விட்டோம். இதுதான் இன்று வினையாகி விட்டது.
மக்கள் பெருக்கம்.. இருக்க இடமில்லை
மக்கள் பெருக்கம் அதிகரித்ததும், இருக்கக் கூட இடம் இல்லாமல் போனதும்தான் சென்னை ஒரு மெகா நகரமாக விரிவடைந்து வெடித்துப் போக முக்கியக் காரணம். எங்கு இடம் கிடைத்தாலும் அங்கு குடியேறும் அளவுக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டனர். இதனால்தான் பல இடங்களில் தெரிந்தோ தெரியாமலோ ஆக்கிரமிப்புகளுக்கு மக்களும் துணை போகும் நிலை ஏற்பட்டு விட்டது.
எவ்வளவுதான் தாங்க முடியும்
என்னதான் பெருநகரமாக இருந்தாலும் ஒரு அளவுக்குத்தான் தாங்க முடியும். அதுதான் சென்னை விவகாரத்திலும் நடந்துள்ளது. அமுக்கி அமுக்கி திணித்தால் கடைசியில் அந்த டப்பா வெடித்து பிதுங்குவதைப் போலத்தான் இன்று சென்னையும் பிதுங்கிப் போய் விட்டது. நனைந்து நனைந்து ஊறிப் போன பஞ்சு போல மாறி கிடக்கிறது சென்னை.
நகரத்தை மாற்ற வேண்டும்
இந்த சமயத்தில்தான் நாம் சில முக்கிய விஷயங்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. சென்னை நகரின் முகத்தில் நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அந்த முக மாற்றம் மட்டுமே சென்னையை உயிர்ப்புடன் வைக்க முடியும்.
கான்க்ரீட் காடாக மாறி.. நாறிப் போன தலைநகரம்
சென்னை நகரத்தை கட்டுமானத் தொழில்தான் மிகப் பெரிய அளவில் நாசம் செய்து விட்டது என்று தைரியமாக சொல்லலாம். ஏரி, குளம், குட்டை என எதையுமே அவர்கள் விடவில்லை. எல்லாவற்றையும் காலி செய்து விட்டது ரியல் எஸ்டேட். எங்கு பார்த்தாலும் கட்டடங்களாக கட்டி வைத்தால் இயற்கையால் என்னதான் செய்ய முடியும் - தன்னை ஆக்கிரமித்தவற்றை அழிப்பதைத் தவிர.
கூவம் குப்பையானது.. அடையாறு அடையாளம் இழந்தது
கூவம் ஆற்றை குப்பைக் கூளமாக்க விட்டோம். அடையாறு ஒரு ஆறு என்பதே பலருக்குத் தெரிவதில்லை. வருடத்திற்கு ஒருமுறைதான் அதில் தண்ணீரைப் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு இந்த இரு நதிகளையும் பலாத்காரம் செய்து பிழிந்து போட்டு விட்டோம்.
இதைச் செய்தால் நல்லது
இப்போது நாம் செய்ய வேண்டியது விஸ்தீரமாணாக நீண்டு விட்ட சென்னையை இறுக்கிப் பிடித்து சுருக்க வேண்டியதுதான். இதைச் செய்தால்தான் சென்னை நகரில் குவிந்திருக்கும் மக்கள் கூட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.
திருச்சியில் சட்டசபை
சென்னையில்தான் எல்லாம என்ற கொள்கையை முதலில் மாற்ற வேண்டும். திருச்சிக்கு சட்டசபையை மாற்றலாம். திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்று மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். திட்டமிட்டிருந்தார். ஆனால் நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் சட்டசபையை மட்டும் தாராளமாக மாற்றலாம்.
வர்த்தகத்திற்குக் கோவை
அதேபோல கோவையை வர்த்தக தலைநகரமாக மாற்றலாம். எந்தத் தொழிலாக இருந்தாலும் சென்னை என்று கூறுவதை விட்டு விட்டு கோவைக்கு இடம் பெயர்க்கலாம் எல்லாவற்றையும். அதேசமயம், கோவையை கெடுத்து விடக் கூடாது. அதுவும் முக்கியம்.
மதுரையில் உயர்நீதிமன்றம்
தமிழகத்தின் உயர்நீதிமன்றத் தலைமையிடமாக சென்னை இருப்பதை மாற்றி மதுரைக்கு இடம் பெயர்க்க வேண்டும். ஏற்கனவே அங்கு உயர்நீதிமன்ற பெஞ்ச் உள்ளது. மொத்த உயர்நீதிமன்றத்தையும் மதுரைக்கு மாற்றலாம். நீதித்துறையின் தலைமையிடமாக மதுரை மாற வேண்டும்.
சென்னையில் இவை மட்டுமே
தலைநகராக சென்னை தொடரலாம். முதல்வர், ஆளுநர், தலைமைச் செயலகம், அமைச்சர்கள் மட்டு்மே சென்னையில் இருக்கும்படி மாற்றியமைக்க வேண்டும்.
தென் ஆப்பிரிக்காவைப் பாருங்கள்
தென் ஆப்பிரிக்காவை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அங்கு தலைநகராக பிரிட்டோரியா உள்ளது. அங்குதான் அரசு அலுவலகங்கள் உள்ளன. அதேசமயம், நாடாளுமன்றம் கேப்டவுனில் இருக்கிறது. உச்சநீதிமன்றம் புளோம்போன்டனில் உள்ளது. வர்த்தக தலைநகராக ஜோஹன்னஸ்பர்க் விளங்குகிறது. ஆனால் எல்லாமும் ஒருங்கிணைக்கப்பட்டு அருமையாக இயங்குகின்றன.
ஜெ. நினைத்தால் செய்யலாம்
இந்த மாற்றங்கள் நிச்சயம் அதிரடியானவை, பெரும் திருப்பத்தைத் தரக் கூடியவை. இதை செய்யும் அரசியல் துணிச்சல் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. அவர் நினைத்தால் செய்ய முடியும்.இதைச் செய்வதன் மூலம் சென்னையை சற்று ரிலாக்ஸ் ஆக்கலாம்.. கூடவே இதைச் செய்த கையோடு சென்னையின் ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் பார்க்காமல் காலி செய்தால் சென்னை மேலும் நிம்மதி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.