போக்குவரத்துத்துறை ஊழல்- முன்னாள், இந்நாள் அமைச்சர்களை விசாரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை: போக்குவரத்துத்துறையில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து முழுமையான தகவல்களுக்கு அத்துறையின் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
போக்குவரத்துத்துறையில் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் அத்துறையின் ஊழல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் போக்குவரத்துத்துறை ஊழல்கள் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
1520 கோடிக்கு ஊழல்
அந்த அறிக்கையில், போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவைக்கும் அதிகமாக பணியாளர்களை நியமித்தது கண்டிப்பாக சேவை நோக்கம் கொண்டதாக இருக்க முடியாது; ஊழல் நோக்கம் கொண்டதாகத்தான் இருக்க முடியும். ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கையூட்டு வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 38,000 பணியாளர்களிடம் சராசரியாக ரூ.4 லட்சம் வாங்கப்பட்டதாக வைத்துக் கொண்டால், ரூ.1520 கோடி அளவுக்கு ஊழல் நடை பெற்றிருப்பதாகத்தான் அர்த்தமாகும்.
நடவடிக்கை எடுக்காதது ஏன்?
அதுமட்டுமின்றி ஊழல் பணத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் பேருந்துகளை வாங்கி இயக்கியதாகவும், அதுகுறித்த பட்டியல் அரசிடம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் கூறும் தகவல்கள் அனைத்தும் உண்மை எனும் பட்சத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எப்போதோ வழக்குப்பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?
ஊழல்வாதி செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜி ஊழல்வாதி எனத் தெரிந்தும் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் அவருக்காக இப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, கருப்பணன் ஆகியோர் தேர்தல் பணியாற்றியது ஏன்?என்பது பற்றி போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளிக்க வேண்டும். எனவே இருவரும் இந்த ஊழல் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
ஊழல் பணம் பறிமுதல்
அரசுப் போக்குவரத்துக்கழக பணியாளர் நியமன ஊழல் தொடர்பாக இனியும் தாமதிக்காமல் உடனே வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரிக்க வேண்டும். ஊழல் செய்து சுருட்டப்பட்ட பணத்தை அவரிடமிருந்து பறிமுதல் செய்ய வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் சீர்குலைவுக்கு இதுபோன்ற ஊழல்கள் தான் காரணம் என்பது உறுதியாகி விட்டதால், இழப்பைக் காரணம் காட்டி உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ராமதாஸ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.