கனிம மணல் முறைகேடு: அரசின் நடவடிக்கையில் திருப்தி- ஹைகோர்ட்
சென்னை: தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாக கூறி கனிம மணல் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
கனிம மணல் விதிமீறல் தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க கோரி தயா தேவதாஸ், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுந்தரம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் சட்டவிரோதமாக கனிம மணல் அள்ளப்படுவதாகவும், இதில் மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாக இருப்பதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்நிலையில், கனிம மணல் முறைகேடு தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால் வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது.
கனிம மணல் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் தமிழக அசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இருக்கிறது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், மனுதாரர்கள் முறைகேடு இருப்பதாக கருதினால் தமிழக அரசு நியமித்த குழுவிடம் 15 நாட்களில் முறையிடலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.