வீணாகும் வாகனங்களை காயலான் கடைக்கு போட்டு காசு பார்க்குமா அரசு?
கரூர்: கரூர் அரசு அலுவலக வளாகத்தில், பயன்பாடற்ற வாகனங்கள் வீணாக மழை மற்றும் வெயிலில் சீரழிந்து வருவதால் இவற்றை வருகிற விலைக்கு விற்றால் அரசுக்கு வருமானமாவது கிடைக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
தமிழக அளவில் அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழக நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட பழைய வாகனங்கள் அலுவக வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டு மழையிலும், வெயிலிலும் வீணாகி வருகின்றன.
இத்தகைய வாகனங்களை ஒன்று ஏலத்தில் விடலாம் அல்லது வருகிற விலைக்கு விற்று விடலாம். இதனால் அரசின் கஜனாவுக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்.
கரூர் மாவட்டம் குளித்தலை பயணியர் விடுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலைதுறை தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு சொந்தமான லாரி கடந்த பல ஆண்டுகளாக கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் சின்னாபின்னாமாகி வருகின்றது.
இதை காயலான் கடைக்குப் போட்டால் கூட அரசின் கஜானா நிரம்பும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதே போல் கரூர் நகர காவல் நிலையத்தில் விபத்துகளில் ஈடுபட்ட வாகனங்களில் நிலைமை கூட இப்படி தான். ஆனால் அது பொதுமக்களின் வாகனம் என்பதால் அவர்கள் தினந்தோறும் காவல் நிலையம வந்து தங்களது வாகனங்களின் பரிதாப நிலையைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி வேதனையில் செல்கின்றனர்.