குரூப்-2 வினாத்தாள் வெளியான வழக்கு - ஏப்ரலுக்கு தள்ளி வைப்பு
சென்னை: குரூப் -2 வினாத்தாள் வழக்கில் சம்மன் வழங்கப்படாததால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2012ம் ஆண்டில் நடந்த குரூப் 2 தேர்வில் 6 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
அதில் ஈரோடு தர்மபுரியில் தேர்வுக்கு முன்னமே வினாத்தாள் வெளியாகியதால் தேர்வு ரத்தானது.போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
வழக்கு சி.பி.சி.ஐ.டி.,போலீஸாருக்கு மாற்றப்பட்டதும் வணிக வரித்துறை இணை கமிஷனர் ரவிக்குமார், அச்சக உரிமையாளர் ரிஷிகேஷ் குண்டு உள்ளிட்ட 26 பேரை கைது செய்தனர். நான்கு பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். மற்றவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம், சி.பி.சி.ஐ.டி., போலீஸார் 600 பக்க குற்றப்பத்திரிக்கையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கில், முதல் விசாரணை நேற்று துவங்கியது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளியான ரிஷிகேஷ் குண்டு மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். மற்ற 25 பேருக்கும் சம்மன் வழங்கப்படாததால் நேற்று ஆஜராகவில்லை. இதை அடுத்து ஈரோடு நீதிபதி கவிதா வழக்கை ஏப்ரல் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.