ஐஐடி மாணவர் சூரஜை தாக்கியது இடதுசாரிகளே...படுபச்சை பொய் சொல்லும் எச். ராஜா!
ஐஐடி வளாகத்தில் மாணவர் சூரஜ்ஜை தாக்கியது இடதுசாரி குண்டர்களே என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்டரில் பச்சை பொய்யாக ஒரு பதிவிட்டுள்ளார்.
சென்னை: ஐஐடி வளாகத்தில் மாட்டுக்கறி திருவிழா நடத்திய மாணவர் சூரஜ்ஜை தாக்கியது இடதுசாரி குண்டர்கள் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா டுவிட்டரில் படுபச்சை பொய்யை பதிவிட்டுள்ளார்.
கடந்த 28ம் தேதி இரவு சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி திருவிழா நடத்தப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பாஜகவின் தேசிய செயலாளர் ராஜா கடும் கண்டனம் தெரிவத்ததோடு மாட்டிறைச்சி திருவிழா நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில் நேற்று மதியம் ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்த ஆராய்ச்சிப் படிப்பு பயின்று வரும் மாணவர் சூரஜை 7 மாணவர்கள் கடுமையாக தாக்கினர். இதில் வலது கண்ணில் பலத்த காயமடைந்த சூரஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விஜயன் வலியுறுத்தல்
சூரஜ் தாக்கப்பட்டது குறித்து அவரிடம் வாக்குமூலம் பெற்று போலீசார் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சூரஜ் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சூரஜை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
பதில் டுவீட்
கேரள முதல்வரின் கண்டனம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதில் டுவீட் செய்துள்ளார். அதில் சூரஜை தாக்கியது இடசாரி குண்டர்களே என்று கூறியுள்ளார்.
இடதுசாரிகளே காரணம்
மற்றொரு டுவீட்டில் இடதுசாரி குண்டர்களே தாக்கிருக்கும் போது முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவிப்பது ஒரு சார்பாக உள்ளது என்று ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். மாணவர் சூரஜ் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு இதில் தொடர்புடையவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
சட்டம் என்ன சொல்கிறது
மேலும் இறைச்சிக்காக மாடுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதே தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் உள்ள விலங்குகளை அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களுக்கு விற்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்றே சட்டம் சொல்வதாகவும் ராஜா விளக்கமளித்துள்ளார்.