கோவில்களில் ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுக்கு ஜன.18 வரை இடைக்கால தடை
மதுரை: கோவில்களில் ஆடைக்கட்டுபாடு தொடர்பான உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்வோருக்கு, ஆடை கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, புத்தாண்டு முதல், தமிழகத்தில் உள்ள, 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்திய நிலையில் ஜனவரி 18 வரை இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், அக்கியம்பட்டியைச் சேர்ந்த ராஜு என்பவர், அங்குள்ள விநாயகர் கோயில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், கலைநிகழ்ச்சி நடத்த அனுமதிகோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி, கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதால் கோவிலுக்கு வரும் ஆண்கள் வேட்டி, மேல்துண்டு போன்ற ஆடைகளையும், பெண்கள் சேலை, தாவணி, சுடிதார் போன்ற உடலை மறைக்கும் ஆடைகளை அணிந்துவர வேண்டும் என்று கடந்த டிசம்பர் 1ம் தேதி உத்தரவிட்டார். குட்டைப்பாவாடை, ஜீன்ஸ் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து கோவில்களிலும் இதனை அமல்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறினார். இதனையடுத்து ஜனவரி 1ம் தேதி முதல் இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள, 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தியது.
இதை எதிர்த்து, அறநிலையத்துறை செயலர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அந்த மனுவில் பல்வேறு கலாசாரத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வருவர். ஒரே மாதிரியான ஆடை அணிய கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல.
அதுவும் இந்த கட்டுப்பாடு தனிமனித உரிமையில் தலையிடும் விதமாக உள்ளது எனவும் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஹரிதா, சுகந்தி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரரின் வாதத்தை ஏற்று கோவில்களில் ஆடைக்கட்டுப்பாடுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications