டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: வழக்கறிஞர் உட்பட மூவர் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் முன்ஜாமீன் கேட்டு வழக்கறிஞர் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை துரைப்பாக்கம், குமரன் குடில் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுப்பையா (59). அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த சில மாதங்களாக அபிராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்ல காரில் ஏறும்போது 5 பேர் கொண்ட கும்பல் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 25ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
இதனிடையே, இந்த படுகொலை நடந்த விதம், மருத்துவமனை அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் போலீசாருக்கு முக்கிய தடயமாக கிடைத்தது.
காவல்துறையினரால் தேடப்பட்ட வழக்கறிஞர் பெய்சில், அவருடைய தம்பியும், என்ஜினீயருமான போரீஸ் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும், இவர்களின் பெற்றோர் பொன்சாமி, மேரிபுஷ்பம் ஆகியோர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திலும் சரண் அடைந்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞர் வில்லியம்ஸ் உள்பட 3 பேர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறையினரின் விசாரணை நிலுவையில் உள்ளதால் மனுவை நிராகரிப்பதாக கூறி, அதனை நிராகரித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications