வைகோ மீதான பொடா வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை!
சென்னை: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்பட 9 பேர் மீது தொடரப்பட்ட பொடா வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மதுரை திருமங்கலத்தில் நடந்த ம.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்தை ஆதரித்து பேசியதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ உட்பட 9 பேர் மீது கியூ பிரிவு போலீசார் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் வைகோவை 2002-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்த பின்னர், இந்த வழக்கு பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், வைகோ மீது பதிவு செய்யப்பட்ட பொடா சட்டப் பிரிவுகளை வாபஸ் பெறுவதாகவும், பிற சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீதான வழக்கை நடத்துவதாகவும் அப்போதைய அரசு வக்கீல் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை பூந்தமல்லி சிறப்பு பொடா கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வைகோ வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் தேவதாஸ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, பூந்தமல்லி பொடா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வரும் வைகோ மீதான பொடா வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.