விஜயபாஸ்கருக்கு ஏன் கட்சி பதவி... புரியாமல் விழிக்கும் அதிமுகவினர்!
விஜயபாஸ்கருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு புதிய பொறுப்பு கொடுத்த விவகாரம்தான் அதிமுகவுக்குள் இப்போது புகைந்து கொண்டிருக்கிறது.
கைது செய்யப்பட்டுவிடுவாரா, அல்லது டிஸ்மிஸ் செய்யப்பட்டு விடுவாரா தமிழகமே எதிர்பார்த்தது. ஆனால் அவருக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிப்பது கட்சிக்குள் சலசலப்பையும், தமிழக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. குட்கா விவகாரத்தில் இவரது பெயர் அடிபட்டதுடன், வீடு, அலுவலகம், கல்லூரி என அமைச்சருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் ரெய்டு நடந்தன.
போதுமான ஆதாரங்கள்
இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர். அதாவது அம்புகள் கைது செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதை எய்தவர் கைது செய்யப்படவில்லை என்பதே உண்மை. ஒரு வருடத்துக்கு முன்னாடியே ரெய்டு நடத்தியபோதும், தற்போது ரெய்டு நடத்தியபோதும் தேவைக்கு அதிகமான ஆவணங்களும், ஆதாரங்களும் அதிகாரிகளுக்கு கிடைத்துவிட்டன. ஆனாலும் இது சம்பந்தமாக அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
பரபரப்பான பேச்சு
இந்த நிலையில், கட்சியில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்கு பின்னர் நேற்றிரவு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி வழங்குவதாக அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. கூட்டத்தில் வேறு சிலருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் இதில் அதிகமாக பேசப்படுவது விஜயபாஸ்கருக்கு தந்த பொறுப்பை பற்றிதான்.
கிலியும்... பீதியும்...
எடப்பாடி பழனிசாமி ஏன் விஜயபாஸ்கர் மீது ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என்ற பதிலே இன்னும் தமிழக மக்களுக்கு தெரியவில்லை. ஆனால் அதற்குள் இப்படி பொறுப்பை வழங்கியுள்ள காரணம் எதற்காக என்று அதிமுக தரப்பிலும் கேள்வி எழுகிறது. இதுவே ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், இப்படித்தான் ஊழல் புரிந்தவர் என மக்கள் முன் வெளிச்சமாக தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவாரா? அவர் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் அமைச்சர்களுக்கு நித்தம் கிலிதான். நித்தம் பீதிதான்.
ஜெயலலிதா இருந்திருந்தால்?
எப்போ யார் பதவி போகுமோ, விடிந்தால் எந்த அமைச்சர்கள் பொறுப்பிலிருந்து தூக்கப்பட்டு விடுவார்கள் என்ற நிலை இருந்தது. போயஸ் கார்டனில் இருந்து கொண்டே, உளவுத்துறை மூலம் தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஆராய்ந்து, அதன்படி நடவடிக்கை எடுப்பார். ஆனால் இப்போதோ நிலைமை மோசமாகி விட்டதாகவும், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் முதலமைச்சர் தயங்குகிறார் எனவும் கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.
புதிய பொறுப்பு ஏன்?
இந்த விசாரணை இன்னும் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. சிபிஐ ஒருபக்கம் அமைச்சரை விசாரணைக்கு அழைக்க வேண்டி வரும். அல்லது அவர் கைது கூட செய்யப்படலாம். இதெல்லாம் வரும் என்று தெரிந்தும் முதலமைச்சர் எதற்காக விஜயபாஸ்கருக்கு புதிய பொறுப்பை கொடுக்கிறார் என்றே புரிபடாமல் உள்ளது.
குற்றவாளி படங்கள்
தண்டிக்கப்பட்ட குற்றவாளி படங்களை அரசு அலுவலகங்களில் வைக்கக்கூடாது என்ற வழக்கு கோர்ட்டுக்கே சென்றதையும் மக்கள் இன்னும் மறந்துவிடவில்லைதான். அமைச்சர் கைதுசெய்யப்பட்டாலோ, அல்லது பதவியை இழக்க நேரிட்டாலோ, எதற்கோ தம் கட்சியில் ஒரு பொறுப்பும், அங்கீகாரமும் இருக்கட்டும் என்று முதலமைச்சர் நினைத்து விட்டாரா என்றும் தெரியவில்லை.
குறையும் நம்பகத்தன்மை
ஆனால் இந்த விவகாரத்தில் இப்போதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதையும் முதலமைச்சர் எடுக்காததோடு, இது சம்பந்தமாக மவுனம் சாதிப்பது தன் அரசுக்கு இழுக்கு என்றுகூட முதலமைச்சர் நினைக்கவில்லையா என கட்சிக்குள்ளேயே முணுமுணுக்க தொடங்கிவிட்டனர். எந்த அரசு தன் மீதான தவறுகளை தட்டிக் கேட்க தயங்குகிறதோ, அந்த அரசு மக்களின் நம்பகத்தன்மையை விரைவில் இழந்துவிடும் என்பதே கடந்த கால அரசியல் நமக்கு காட்டும் பாடங்கள்!!